சீண்டியவர்கள் தலையை உடைத்த கயாடு லோஹர்.. அடேங்கப்பா இந்த சம்பவம் தரமா இருக்கே!
சென்னை: சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் கயாடு லோஹர், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது பள்ளிப் பருவத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை வெளிப்படையாக பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை ஈவ் டீசிங் செய்த இளைஞரை கல்லால் தாக்கிய சம்பவம் குறித்து அவர் பேசியிருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில் நடிகை ப்ரீத்தி முகுந்தனும் உடன் கலந்து கொண்டிருந்தார். சினிமா அனுபவங்கள் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் குறித்தும் இருவரும் பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய கயாடு லோஹர், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை வெளிப்படையாக கூறினார்.
கல்லை எடுத்து: தான் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், பள்ளியில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் சில இளைஞர்கள் தினமும் காத்திருந்து ஈவ் டீசிங் செய்ததாக அவர் தெரிவித்தார். முதல் இரண்டு நாட்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பொறுத்துக் கொண்டதாகவும், நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்ததாகவும் கூறினார்.

ரத்தம்: ஆனால் மூன்றாவது நாளும் அதே தொல்லை தொடர்ந்ததால் தனது பொறுமை எல்லையைத் தாண்டிவிட்டதாக கயாடு லோஹர் கூறினார். அருகில் கிடந்த கல்லை எடுத்து, தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்தவர்களில் ஒருவரை தாக்கியதாகவும், அந்தக் கல் அவரது தலையில் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் மீண்டும் தன்னை தொந்தரவு செய்ய வரவில்லை என்றும் அவர் சிரித்தபடியே நினைவுகூர்ந்தார்.
எல்லை மீறும் போது: மேலும், "என்னைப் பார்த்தால் மிகவும் அமைதியான, சாஃப்ட்டான பெண் என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால் யாராவது எல்லை மீறி தவறாக நடந்துகொண்டால், நான் அமைதியாக இருக்க மாட்டேன். அப்போது என்னுடைய ரியாக்ஷன் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும்," என்று கயாடு லோஹர் கூறியிருந்தார்.

அதே பேட்டியில் கலந்து கொண்டிருந்த நடிகை ப்ரீத்தி முகுந்தன், சமீபத்தில் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படத்தில் நடித்திருப்பது குறித்தும் பேசினார். அதிரடி சம்பவங்கள் நிறைந்த அந்தப் படத்தைப் போலவே, நிஜ வாழ்க்கையிலும் பள்ளிப் பருவத்திலேயே தைரியமாக எதிர்த்து நின்ற அனுபவத்தை கயாடு லோஹர் பகிர்ந்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
கயாடு லோஹரின் இந்த பேட்டி வெளியாகியுள்ள நிலையில், "தவறை தைரியமாக எதிர்கொண்டிருக்கிறார்", "பெண்கள் பயந்து ஒதுங்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு" என்று பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த வெளிப்படையான பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications