தனுஷுடன் பணியாற்றுவது அப்படித்தான் இருக்கிறது.. ஓபனாக பேசிய பாலிவுட் நடிகை
மும்பை: இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தனது தடத்தை பதித்திருக்கும் அவர் இப்போது பாலிவுட்டில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெயின் என்கிற படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் டெல்லியில் மிகவும் மும்முரமாக நடந்துவருகிறது. ஏற்கனவே தனுஷும், ஆனந்த்தும் இணைந்த ராஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிருகிறது.
தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவருபவர் தனுஷ். தமிழில் அவர் கடைசியாக ராயன் படத்தில் நடித்தார். அது அவருக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை அவரே இயக்கி நடித்திருந்ததால் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. மேலும் கடுமையான ட்ரோல்களையும் அந்தப் படம் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களின் கலவைதான் ராயன் என்றும் ரசிகர்கள் ஓபனாகவே பேசினார்கள்.

இப்போதைய படங்கள்: ராயன் படத்தை முடித்த தனுஷ் அடுத்ததாக குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை சேகர் கம்முல்லா இயக்கியிருக்கிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படம் இந்த வருடத்துக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இட்லி கடை என்கிற படத்தையும் இயக்கி நடித்து முடித்திருக்கிறார். அதில் அவருக்கு நித்யா மேனன் ஜோடியாக நடித்திருக்கிறார். படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும்; அன்றைய நாள் அஜித்தின் குட் பேட் அக்லி வருவதால் அநேகமாக இட்லி கடை ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரைத்துறையில் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது.
அடுத்தடுத்த படங்கள்: இட்லி கடை படத்துக்கு பிறகு தமிழில் அவர் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இசைஞானி இளையராஜாவின் பயோபிக் உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி போர்தொழில் படத்தின் இயக்குநர் இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் தகவ்லகள் சில ஓடிக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் தனுஷ்: இதற்கிடையே பாலிவுட்டிலும் ஒரு படத்திலும் நடித்துவருகிறார் தனுஷ். ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெயின் என்கிற படத்தில்தான் இப்போது தனுஷ் மும்முரமாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் கமிட்டாகியிருக்கிறார். ஏற்கனவே தனுஷும், ஆனந்த்தும் இணைந்து ராஞ்சனா என்கிற வெற்றி படத்தை கொடுத்திருப்பதன் காரணமாக இப்படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
கீர்த்தி சனோன் பேட்டி: இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடக்கும் IIFA விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி பேசுகையில், "தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராயுடன் தேரே இஷ்க் மெயின் படத்தில் பணியாற்றிவருகிறேன். டெல்லியில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. மீண்டும் நான் அந்த ஷூட்டிங்கிற்கு வருவதற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு அழகான படம். அதில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் இதற்கு முன்பு நான் ஏற்காத ஒன்று. காதல் படங்கள்தான் எனக்கு பிடிக்கும். இதுவும் ஒரு காதல் திரைப்படம்தான். இந்தக் கதை வித்தியாசமாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. தனுஷுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். அது அற்புதமான ஒன்று. அதேபோல்தான் படமும் இருக்கும். இவர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.


Click it and Unblock the Notifications











