நான் நடித்ததில் என் கணவருக்கு பிடித்த படங்கள் இவைதான்.. கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். கோவாவில் வைத்து அவர்களது திருமணமானது ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அத்திருமண விழாவில் விஜய், திரிஷா, டிடி, அட்லீ, பிரியா, கல்யாணி ப்ரியதர்ஷன் என பலர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். கோலிவுட்டில் அறிமுகமாகி அவர் நடித்த முதல் சில படங்கள் கமர்ஷியல் ரீதியாக அமைந்தன. அதில் டூயட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டார் அவர். அதனையடுத்து போகப்போக தன்னுடைய ரூட்டை மாற்றினார் அவர். அதன் பலனாக நடிகையர் திலகம் என கொண்டாடப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்திக்கு கிடைத்தது.
தேசிய விருது: அந்தப் படத்தில் சாவித்திரியாகவே நடித்தார் என்பதைவிட வாழ்ந்தார் என்றுதான் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ஒவ்வொரு சீனிலும் அவரது நடிப்பை பார்த்து பலரும் புல்லரித்தார்கள். மிகச்சிறப்பாக நடித்ததன் காரணமாக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.ஆனால் தேசிய விருது கிடைத்தாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தார் அவர்.

தமிழில் செகண்ட் ரவுண்ட்: அப்போதுதான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் கமிட்டானார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனைத் தொடர்ந்து தமிழில் அவருக்கு சைரன் உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் ரகுதாத்தா உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா என வரிசையாக படங்களில் நடித்துவருகிறார் அவர். இதன் காரணமாக அவரது இரண்டாவது இன்னிங்ஸ் பிஸியாக ஆரம்பித்தது.
திருமணம்: இப்படிப்பட்ட நிலைமையில் கீர்த்தி சுரேஷ் அவரை காதலிக்கிறார் இவரை காதலிக்கிறார் என பேச்சுக்கள் எழுந்தன. அத்தனைக்கு அமைதியாக இருந்த அவர்; திடீரென ஒருநாள் தனது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத்திய கையோடு கோவாவில் வைத்து திருமணமும் செய்துகொண்டார். இரண்டு மத முறைப்படி இத்திருமணம் நடந்தது. இதற்கிடையே ஹிந்தியில் பேபி ஜான் படத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்கு பின்பும் நடிப்பு: திருமணம் முடித்த கையோடு பேபி ஜான் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டார். எனவே அவர் திருமணத்துக்கு பிறகும் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அவரது நடிப்பு பயணத்துக்கு ஆண்டனி தட்டில் எப்போதும் தடை போடமாட்டார் என்று கீர்த்திக்கு நெருக்கமான தரப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் தனது படங்களில் கணவருக்கு பிடித்த படம் குறித்து சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் ஓபனாக பேசியிருக்கிறார் கீர்த்தி.
என்ன படம் பிடிக்கும்?: அவர் பேசுகையில், "ஆண்டனியிடம் நான்தான் முதலில் காதலை சொன்னேன். எங்கள் காதலை சீக்ரெட்டாக இத்தனை காலம் வைத்திருப்பதற்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். நான் நடித்த படங்களில் அவருக்கு மகாநடி, சாணிக்காயிதம், ரகுதாத்தா உள்ளிட்ட படங்கள் பிடிக்கும். முக்கியமாக சாணிக்காயிதம் போன்ற படங்களின் ஜானரை அவர் விரும்புவார். அந்தப் படத்தை பார்த்துவிட்டு எனது பக்கத்தில்கூட பத்து நாட்கள் வரவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











