ஐஸ்கிரீம் கொடுத்தால் நடிக்கிறேன்.. இல்லைனா முடியாது.. குஷ்பூ வைத்த கோரிக்கை தெரியுமா?
சென்னை: தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் என இரண்டு துருவங்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர். குஷ்பூவின் மேல் அபரிமிதமான பாசத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின. மேலும் குஷ்பூ இட்லி என்பதும் தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனது. அந்த அளவுக்கு குஷ்பூ 80ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். இந்த சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ. ஆனால் தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தான் அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார். அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற அவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

ஒரே வருடத்தில் 10 படங்கள்: 90களில் குஷ்பூ மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டு மட்டும் அவர், “மன்னன், ரிக்ஷா மாமா, பாண்டித்துரை, சிங்காரவேலன், சேவகன், இது நம்ம பூமி, அண்ணாமலை, அம்மா வந்தாச்சு, நாளைய செய்தி, பாண்டியன் என மொத்தம் 10 தமிழ் படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.
அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.
குஷ்பூ பேட்டி: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு குஷ்பூ அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், 'நான் சினிமாவுக்குள் வருவேன் என்று எதிர்பார்த்ததில்லை. என்னுடைய அண்ணன் ஹேமமாலினியின் உறவினர்களோடு நட்பில் இருந்தான். அதனால் அவன் அடிக்கடி ஹேமமாலினியின் வீட்டுக்கு சென்று விளையாடுவான். ஹேமமாலினியின் வீடு எப்படி இருக்கும் என்ற ஆவல் எனக்கு இருந்தது.
ரவி சோப்ரா அறிமுகம்: ஒருமுறை அண்ணனுடன் ஹேமமாலினியின் வீட்டுக்கு சென்றேன். அப்போது ரவி சோப்ரா என்னை பார்த்தார். அந்த சமயத்தில் அவர் பர்னிங் ட்ரெய்ன் என்ற படத்தை எடுப்பதற்கான வேலையில் இருந்தார். அந்தப் படத்தில் எட்டு வயது குழந்தை கேரக்டரில் என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டார். அதனையடுத்து அவர் எனது அம்மாவிடமும், என்னிடமும் கேட்டார். அம்மாவும் என்னிடம் ஓகேயா என்று கேட்டார்.
ஐஸ்கிரீம்: இதனையடுத்து ரவி சோப்ராவிடம் நான் தினமும் ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தால் நடிக்கிறேன் என்றேன். எனக்கு ஐஸ்கிரீம் என்றால் அந்த சமயத்தில் உயிராக இருந்தது. நான் வைத்த கண்டிஷனுக்கு ரவியும் ஒத்துக்கொண்டார். அதேபோல் பள்ளி நேரத்தில் நடிக்க வரமாட்டேன் என்று சொன்னேன். அந்த கண்டிஷனுக்கும் அவர் ஒத்துக்கொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











