கேம் சேஞ்சர்ல மிஸ் ஆகிடுச்சு.. இந்த முறை ‘டாக்ஸிக்’ல மிஸ்ஸே ஆகாது.. கியாரா அத்வானி கலக்குறாங்க!
பெங்களூர்: 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' படத்தில், நடிகை கியாரா அத்வானி ஏற்றுள்ள 'நாடியா' கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு வகைப் படங்களில் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தி, இந்தித் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கியாரா அத்வானி, இத்திரைப்படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் காட்சி தருகிறார். இயக்குநர் கீத்து மோகன்தாஸ் உருவாக்கியுள்ள தீவிரமான, காத்திரமான கதைக்களத்தில், கியாராவின் இந்தக் கதாபாத்திரம் அவரது திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

'நாடியா'வின் ஃபர்ஸ்ட் லுக், வண்ணமயமான சர்க்கஸ் பின்னணியில், கவர்ச்சியான தோற்றத்தில் கியாராவைக் காட்டுகிறது. எனினும், நுணுக்கமாகக் கவனித்தால், அந்தப் பிரகாசமான முகத்துக்கு அடியில் ஆழமான துயரம், வேதனை மற்றும் மன வலி மறைந்திருப்பது தெளிவாகிறது. இது, 'நாடியா' ஒரு சாதாரணக் கதாபாத்திரம் அல்ல; நடிகையின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் வலுவான, உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரம் என்பதை உணர்த்துகிறது.
கியாராவின் நடிப்பு குறித்துப் பேசிய இயக்குநர் கீத்து மோகன்தாஸ், "சில கதாபாத்திரங்களின் நடிப்பு, ஒரு திரைப்படத்திற்குள் மட்டும் சுருங்கிவிடாது; அவை ஒரு கலைஞரையே மறுபரிசீலனை செய்யக்கூடியதாக இருக்கும். இந்தப் படத்தில் கியாரா திரையில் உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு இயக்குநராக, அவர் இக்கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வந்த விதத்திற்கும், அவரது நம்பிக்கைக்கும், அர்ப்பணிப்பிற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்," என்று குறிப்பிட்டார்.
'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் யாஷ் மீண்டும் பெரிய திரைக்குத் திரும்பும் படம் 'டாக்ஸிக்'. மேலும், 'கே.ஜி.எஃப்' வெளியாகி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த இந்தத் தருணத்தில் 'டாக்ஸிக்' குறித்த அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது.

யாஷ் மற்றும் கீத்து மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள 'டாக்ஸிக்' படத்தை கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். உஜ்வல் குல்கர்ணி படத்தொகுப்பையும், டி.பி. அபித் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகளுக்கு 'ஜான் விக்' புகழ்பெற்ற ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் ஜே.ஜே. பெர்ரி மற்றும் தேசிய விருது பெற்ற அன்பறிவ் இரட்டையர்கள் இணை இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் கீழ் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர். ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, வரும் மார்ச் 19 ஆம் தேதி இந்தப் படம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் கியாரா அத்வானிக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு டாக்ஸிக் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து நயன்தாரா லுக் வருமா என ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











