Kiran - சுந்தர்.சி படத்தில் நடித்ததுதான் ரொம்ப பெரிய தப்பு.. என்ன கிரண் இப்படி சொல்லிட்டாங்க?
சென்னை: ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கான பட வாய்ப்புகள் சட்டென்று குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆள் காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். இந்தச் சூழலில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சுந்தர்.சி படத்தில் நடித்தது தவறு என்று கூறியிருக்கிறார்.
கோலிவுட்டுக்கு மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்துதான் ஹீரோயின்கள் வருவது வழக்கமாகியிருந்தது. ஜோதிகா, சிம்ரன்,நமீதா என அந்தப் பட்டியல் நீளும். இப்போதும் மும்பையிலிருந்து குறிப்பிட்டு சொல்லும்படி கதாநாயகிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைதான் கிரண் ரத்தோட். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். சரண் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்: பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவான ஜெமினி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முதல் படமே மெகா ஹிட்டானதால் அறிமுகமாகியிருந்த கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார். இருந்தாலும் கிரண் ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற முத்திரை மட்டும் அவரை விட்டு விலகாமல் இருந்தது. அதை மாற்றுவதற்கு ஒரு படத்துக்காக காத்திருந்தார் கிரண்.
அன்பே சிவம்: அப்படிப்பட்ட சூழலில்தான் சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம். இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. அப்படத்தில் கிரண் கமிட்டானதும் அக்காலகட்டத்தில் பலரும் ஆச்சரியம்தான் பட்டனர். ஆனால் நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் தனது நடிப்பில் அதகளம் செய்திருந்தார் கிரண். தொடர்ந்து அஜித்துடன் வில்லன், பிரசாந்த்துடன் வின்னர் படங்களில் நடித்த அவருக்கு மார்க்கெட் சட்டென சரிந்தது.
ஓரங்கட்டப்பட்ட கிரண்: மார்க்கெட் சரிந்ததை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் திருமலையில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு முழுவதுமாக ஒதுங்கியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார். இப்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் அவர்; ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துவருகிறார். அந்த ஆப்பும் ஒரு விவகாரமான ஆப் என்றே பலராலும் கூறப்படுகிறது.
கிரண் பேட்டி: இந்நிலையில் நடிகை கிரண் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் நடிகை ஷகீலாவுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், “சுந்தர்.சி எனத் குடும்பத்தில் ஒருவர் மாதிரி. அவரிடம் உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று நானேதான் வாய்ப்பு கேட்டேன். அப்படித்தான் ஆம்பள பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அந்தப் படத்தில் நான் ஒரு செட் ப்ராப்பர்ட்டி போல் இருந்தேன். அதில் நடித்தது ரொம்பவே தவறுதான். வின்னர் படத்தின் பாடலில் பிகினி உடை அணிந்ததும் மேற்கொண்டு எனக்கு கிளாமர் ஹீரோயின் என்ற முத்திரை விழுந்தது.
ஐட்டம் டான்ஸ் பிடிக்கவில்லை: அதேபோல் ஐட்டம் டான்ஸ் ஆடுவதிலும் எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது. நான் ஆடிய முதல் ஐட்டம் டான்ஸே விஜய்யுடன் திருமலை படத்தில்தான். அந்தப் பாடல் இன்றுவரை சூப்பர் ஹிட் பாடலாக அமைந்துவிட்டது. அதனையடுத்து தொடர்ந்து எனக்கு ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகளாகவே வர ஆரம்பித்தன” என்றார்.


Click it and Unblock the Notifications











