கெளசல்யாக்கா!
அக்கா, அண்ணி வேடங்களில் முழு மூச்சாக நடிக்க களம் இறங்கியுள்ளாராம் முன்னாள் நாயகி கெளசல்யா.
விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர் படத்தில் நடித்து சினிமாவுக்கு வந்தவர் கன்னடத்து கெளசல்யா. தொடர்ந்து பிரஷாந்த் உள்ளிட்ட பல முன்னணி இளம் நடிகர்களுடன் ஒரு ரவுண்டு அடித்தார்.
புதுப் புது நடிகைகளின் வரவாலும் கெளசல்யாவின் முத்தல் முகத்தாலம் அவருக்கு சீக்கிரமே பிரியா விடை கொடுத்து விட்டது கோலிவுட். இருந்தாலும் மலையாளத்திலும், கன்னடத்திலும் நடித்து வந்தார் கெளசல்யா.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக திருமலை படத்தில் விஜய்யின் அண்ணியாக வந்து ரசிக மகா ஜனங்களை வியப்பில் ஆழ்த்தினார்.
அதன் பிறகும் அவருக்கு நிறைய அக்கா, அண்ணி வேட வாய்ப்புகள் தேடி வந்தன. அம்மா வேடத்திலும் கூட நடிக்கக் கூப்பிட்டார்கள். இருந்தாலும் அவற்றை மறுத்து விட்டார் கெளசல்யா. வீட்டோடு ஒதுங்கியிருந்தார்.
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். எனவே வீட்டோடு சும்மா இருக்கப் பிடிக்காத கெளசல்யா தற்போது அக்கா, அண்ணி வேடங்களிலும், நல்ல வாய்ப்பாக இருந்தால் அம்மா வேடத்திலும் நடிக்க ரெடியாகி விட்டார்.
அதற்கு முதல் படியாக, சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவியின் அக்கா வேடத்தில் நடிக்கிறார். இனிமேல் இதுபோன்ற வேடங்களிலும் தீவிரமாக நடிப்பாராம்.
விஜய்க்கு அம்மா வேடம் கிடைத்தாலும் நடிக்கத் தயார் என்கிறாராம் கெளசல்யா!


Click it and Unblock the Notifications