என்னது கார்த்திக்தான் ஹீரோவா?.. வேற ஆளை பாருங்க.. பதறிய குஷ்பூ.. ஏன் தெரியுமா?
சென்னை: குஷ்பூ தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற டாப் ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்தார். பிறகு கதாநாயகி வாய்ப்பு குறைந்ததை அடுத்து கேரக்டர் ரோலிலும் நடிக்க ஆரம்பித்தார் அவர். மேலும் சின்னத்திரையிலும் நடித்த குஷ்பூ இப்போது பாஜகவில் இருந்தபடி அரசியலில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
மும்பையை பூர்வீகமாகக் கொண்டாலும் குஷ்பூ தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறையாக கற்றுகொண்டவர். தனது சொந்த குரலில் வெகு விரைவிலேயே டப்பிங்கும் பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தவர் குஷ்பூ. தமிழ்நாட்டில் குஷ்பூ இட்லி எனும் அளவுக்கு சென்சேஷ்னல் ஆனவர். அதிலும் தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் கூறும் குணம் உடைய குஷ்பூ ஏகப்பட்ட விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். இருப்பினும் அதனை காதில் ஏற்றிக்கொள்ளாதவர். இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்ட குஷ்பூவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

அரசியல்வாதியான குஷ்பூ: சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தடம் பதித்த குஷ்பூ திமுகவிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அங்கு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்க அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அதனையடுத்து காங்கிரஸிலிருந்து விலகி தற்போது பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் நடிகர் கார்த்திக் குறித்து அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
குஷ்பூ பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நடிகர் கார்த்திக்கை நாங்கள் முரளி என்றுதான் அழைப்போம். ஒரு பார்லருக்கு அடிக்கடி அப்போது செல்வது வழக்கம். அங்கு முரளியும் வருவார். அங்கேதான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். அந்த சமயத்தில் அக்னி நட்சத்திரம், மௌன ராகம் உள்ளிட்ட படங்கள் ஹிட்டான சமயம். அதனால் அவரை பார்த்தபோது அப்படியே உறைந்துபோய் நின்றேன். எங்களது நட்பு அங்கிருந்துதான் தொடங்கியது.
வருஷம் 16: நானும் அவரும் வருஷம் 16 படத்தில்தான் முதன்முறையாக இணைந்து நடித்தோம். எனக்கு அவருடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே எளிமையாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் முன்னதாகவே நாங்கள் இரண்டு பேரும் ஏற்கனவே நல்ல பழக்கமாகி இருந்தோம். அந்தப் படத்துக்கு பிறகு நாங்கள் பெரிதாக எந்தப் படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. நீண்ட காலம் கழித்து கிழக்கு வாசல் படத்தில் சேர்ந்து நடித்தோம். அந்த கால இடைவெளிக்கு எங்களுக்குள் நடந்த சண்டைதான் காரணம்.
தவிர்த்தோம்: அதனாலேயே நாங்கள் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்தோம். அவரிடம் சென்று குஷ்பூதான் ஹீரோயின் என்று சொன்னால்; ஹீரோயினை மாற்றுங்கள் என்று அவர் சொல்வார். என்னிடம் வந்து கார்த்திக்தான் ஹீரோ என்று சொன்னால் நீங்கள் வேறு ஹீரோயினை தேடிக்கொள்ளுங்களும் என்று நானும் சொல்வேன். கிழக்கு வாசல் படத்துக்கு பிறகு விக்னேஸ்வர் படத்தில்தான் நாங்கள் இணைந்து நடித்தோம். அதற்கு அப்படத்தின் இயக்குநர் ரகு முக்கியமான காரணம்.
சாதாரண பிரச்னை: அவர் எங்களிடம், இது நண்பர்களுக்குள் வந்திருக்கும் பிரச்னை. இதையும், தொழிலையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் என்று சொன்னார். நான் உடனே, அப்படி என்றால் நீங்கள் முரளியிடம் சென்று குஷ்பூ நடிக்க சம்மதமா என்று கேட்டு ஓகே வாங்கி வாருங்கள் என்று சொன்னேன். முரளியோ, குஷ்பூவிடம் ஓகே வாங்கி வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதனையடுத்து ரகு, எங்கள் இருவரையும் அமர்ந்து பேச வைத்தார். அதற்கு பிறகுதான் விக்னேஸ்வர் படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது மீண்டும் தொடங்கிய நட்பு இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











