அப்பா என்னிடம் அப்படித்தான் பேசினார்.. மனம் திறந்த குஷ்பூ.. இவ்ளோ கஷ்டமா?
சென்னை: தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் என இரண்டு துருவங்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர். குஷ்பூவின் மேல் அபரிமிதமான பாசத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின. மேலும் குஷ்பூ இட்லி என்பதும் தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனது. அந்த அளவுக்கு குஷ்பூ 80ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ. ஆனால் தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தான் அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார். அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற அவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.
மீண்டும் நடிப்பில் குஷ்பூ: சில காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்த அவர் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் தற்போது ராமபானம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் கோபிசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார் குஷ்பூ. ஆனால் அவர் நடித்த காட்சிகள் சில காரணங்களால் படத்திலிருந்து தூக்கப்பட்டன.
குஷ்பூவின் வருத்தம்: இந்தச் சூழலில் குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "அனைவருக்கும் வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்கும். அந்தக் காலகட்டத்தை கடந்துதான் எல்லோரும் வந்திருப்பார்கள். குறிப்பாக பெண்கள், ஆண்கள் ஆகிய இருவருக்குமே சம அளவு உரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அது எப்போதும் மறுக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. ஒரு பெண் தனியாக என்ன செய்துவிட முடியும் என்ற மனநிலை என்னுடைய அப்பாவுக்கே இருந்தது.
என்ன சாதித்துவிட முடியும்: உன்னால் தனியாக என்ன சாதித்துவிட முடியும் என்று எனது அப்பாவே என்னிடம் கேட்டார். இன்றும் பெண்ணை வக்கிர புத்தியோடு பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுடைய மிகப்பெரிய ஆயுதமே பெண்களை இழிவாக பேசுவதுதான். அதன் வழியாகத்தான் ஒரு ஆண் தன்னை ஆண் என்று நிரூபிக்க முடியும் என்று கருதுகிறார்கள். அது எவ்வளவு கேவலமான புத்தி என்று அவர்களுக்கு புரிய மறுக்கிறது.
ஆதரவாக நூறு பேர்: ஆனால் இப்போது ஒருவர் நம்மை கேவலமாக பேசினால் நமக்கு ஆதரவாக நூறு பேர் வருகிறார். எனவே காலம் கண்டிப்பாக மாறியிருக்கிறது. நம்மை பற்றி கேவலமாக பேசியவர்களை நாம் ஏன் நினைத்துப்பார்க்க வேண்டும். நமக்கு ஆதரவாக நின்ற நூறு பேர் பற்றித்தான் நாம் நினைக்க வேண்டும் என்று தோன்றும். பாசிட்டிவ்வான விஷயத்தை பார்க்கும்போது நமக்குள் மகிழ்ச்சி எப்போதுமே குடிகொண்டிருக்கும்.
தந்தை ஏன் அப்படி பேசினார்: ஒரு தந்தையானவர் நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். 16 வயதிலிருந்து என்னுடைய தந்தையிடம் நான் நெருக்கமாக இருந்ததில்லை. அதற்கு பிறகு நான் என்னுடைய தந்தையை பார்த்ததே இல்லை.இப்போதுகூட அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட எனக்கு தெரியவில்லை. அதுகுறித்து எனக்கு பெரிதாக அக்கறையும் இல்லை. என் அப்பாவே என்னிடம் தவறாக நடந்துகொண்டது என்னுடைய இதயத்தின் ஓரத்தில் எங்கேயோ இருந்துகொண்டே இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











