அன்னபூரணி பட சர்ச்சை.. ஜெய் ஸ்ரீ ராம்.. மன்னிச்சிடுங்க.. வருத்தம் தெரிவித்த நயன்தாரா!
சென்னை: அன்னப்பூரணி படத்தில் இடம்பெற்ற வசனம் சர்ச்சை ஆனதை தொடர்ந்து நெட்பிலிக்ஸ் தளத்தில் இருந்து ஆப்படம் நீக்கப்பட்டது. இது குறித்து நயன்தாரா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்வேகம் அளிக்கும் வகையில், பாசிட்டிவ் மெசேஜ் உடன் தான் படம் உருவாக்கப்பட்டது, யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல, இதை வேண்டுமென்றே செய்யவில்லை என நயன்தாரா அதில் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ந் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். தனது லட்சியத்தை அடைய துடிக்கும் பெண்ணாக இப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.

அன்னபூரணி படத்தின் ஒரு காட்சியில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்றும், அர்ச்சகரின் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, மும்பையை சேர்ந்த, சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அன்னபூரணி நீக்கம்: இதையடுத்து,நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அன்னபூரணி படம் நீக்கப்பட்டது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம் பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய இந்த சம்பவம் குறித்து நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா வருத்தம்: அதில்,ஜெய் ஸ்ரீ ராம், எனது நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். அன்னபூரணிபடத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.
உள்நோக்கம் இல்லை: அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் இதை எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
யார் மனதையும் புண்படுத்தவில்லை: அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என நயன்தாரா அந்த அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











