கோயில் திருவிழாவில் திடீரென குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்.. செல்ஃபி மோகத்தால் நடந்த தள்ளு முள்ளு!
சேலம்: சுந்தர பாண்டியன், கும்கி, சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை லட்சுமி மேனன் சேலம் அருகே உள்ள மல்லூர் வேங்காம்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் திடீரென மேடையேறிய லட்சுமி மேனன் நடன கலைஞர்களுடன் மேடையில் குத்தாட்டம் போட்டார். லட்சுமி மேனனுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு மக்கள் கூட்டம் திரண்டதால் போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது அந்த இடத்தை சற்று நேரம் பரபரப்பாக்கியது.
கேரளாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த லட்சுமி மேனன் 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ரகுவின்டே சொந்தம் ரசியா, ஐடியல் கப்புல் உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், தமிழில் 2012ம் ஆண்டு சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி என இரு படங்களில் நடித்து அறிமுகமானார்.

இளம் நடிகையாக இருந்தாலும், தேர்ந்த நடிப்பை லட்சுமி மேனன் வெளிப்படுத்திய நிலையில், அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்து முன்னணி நடிகையாக மாறினார். ஆனால், அதுவே அவருக்கு ஒரு கட்டத்தில் சிக்கலை ஏற்படுத்த சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ரெஸ்ட் எடுத்து வந்த லட்சுமி மேனன் மீண்டும் பழையபடி நடிக்க ஆரம்பித்து வருகிறார்.
27 வயசு தான் ஆகுது: சுந்தர பாண்டியன், கும்கி, குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மிருதன், றெக்க, புலிக்குத்தி பாண்டி, சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள லட்சுமி மேனனுக்கு இன்னமும் 27 வயசு தான் ஆகிறது. இளம் வயதிலேயே நடிக்க வந்த அவர் சசிகுமார், விஷால், கார்த்தி உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்தார். வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.

விஷாலுடன் கிசுகிசு: பாண்டிய நாடு படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணைந்து நான் சிகப்பு மனிதன் படத்தில் லட்சுமி மேனன் நடித்த போது, அந்த படத்தில் படு நெருக்கமான காட்சிகளில் இருவரும் நடித்தனர். இருவரும் காதலித்து வருவதாகவும், திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பரவியது சினிமாவில் லட்சுமி மேனனுக்கு சறுக்கலாக மாறியது. சமீபத்தில் கூட விஷால் அதற்கு விளக்கம் கொடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
திருவிழாவில் குத்தாட்டம்: சேலம் அருகே உள்ள மல்லூர் வேங்காம்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லட்சுமி மேனன். அந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் மேடை ஏறி நடனக் கலைஞருடன் கும்கி பட பாடலுக்கு நடனமாடினார். ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிய நிலையில் இன்னொரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரசிகர்களுக்காக இன்னொரு பாடலுக்கு நடனமாடினார் லட்சுமி மேனன்.

செல்ஃபிக்காக குவிந்த கூட்டம்: லட்சுமிமேனன் ஆட்டத்தை கண்ட அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று முண்டியடித்து மேடையை நோக்கி படையெடுத்தனர். திடீரென அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் மேடையை நோக்கி வந்ததால், அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது போலீஸார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சப்தம் ரிலீஸ்: காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி ஒரு சில இளைஞர்கள் மேடைக்கு சென்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர் தொடர்ந்து நடிகை காவல்துறை உதவியுடன் அங்கிருந்து பத்திரமாக மீட்டு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த ஆண்டு சந்திரமுகி 2 படத்தில் நடித்த லட்சுமி மேனன் இந்த ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் சப்தம் படத்தில் ஆதி, சிம்ரன் மற்றும் லைலாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த சம்மருக்கு அந்த பேய் படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











