மறக்க முடியுமா..செளந்தர்யா இப்போ இருந்தா அவங்களுக்கு 44 வயசு தான்..டிரெண்டாகும் பிறந்தநாள் ஹாஷ்டேக்!
சென்னை: விமான விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகை செளந்தர்யாவின் 44வது பிறந்த தினம் இன்று.
கன்னட நடிகையான செளந்தர்யா, நவரச நாயகன் கார்த்தியின் பொன்னுமணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இந்தியிலும் நடித்துள்ளார்.

செளந்தர்யாவின் பிறந்தநாள்
1976ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள முலபாகிலு எனும் இடத்தில் பிறந்த செளந்தர்யா, 1992ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கந்தர்வா எனும் படத்தில் அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடிக்கத் தொடங்கிய அவர் தமிழில் அறிமுகமாகி இங்கும் பிரபலமானார். இன்று அவர் இல்லாத நிலையிலும், அவரது நினைவுகளை நினைத்து வருகின்றனர் ரசிகர்கள்

முன்னணி நடிகர்களுடன்
உலக நாயகன் கமலுடன் காதலா காதலா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படையப்பா, சிவாஜி கணேசன், அர்ஜுன் நடிப்பில் வெளியான மன்னவரு சின்னவரு, நவரச நாயகன் கார்த்தியுடன் பொன்னுமணி மற்றும் முத்து காளை உள்ளிட்ட படங்கள், தெலுங்கில் நாகர்ஜுனா மலையாளத்தில் மோகன் லால், ஜெயராம் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சூப்பர்ஸ்டாருடன் இரண்டு படங்கள்
சுந்தர். சி இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா என இரண்டு படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உடன் செளந்தர்யா தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சந்திரமுகி படத்தின் கன்னட வெர்ஷனான ஆப்தமித்ரா படம் இவரது மறைவுக்கு பின்னரே வெளியானது குறிப்பிடத்தக்கது.

27 வயதில் மரணம்
பான் இந்திய நடிகையாக வலம் வந்த இவர் 107 படங்களில் நடித்த நிலையில், பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக இணைந்தார். 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பெங்களூர் அருகே நடந்த விமான விபத்தில் நடிகை செளந்தர்யா மற்றும் அவரது சகோதரர் அமர்நாத் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நடிகை செளந்தர்யா தனது 27வது வயதிலேயே மரணமடைந்த செய்தி அறிந்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அப்போது சோகத்தில் ஆழ்ந்தது.

நினைத்து உருகும் ரசிகர்கள்
நடிகை செளந்தர்யா உயிரிழந்து 16 ஆண்டுகள் ஆகியும், சினிமா ரசிகர்கள் அவர் மீது கொண்ட அன்பை சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை. #Soundarya என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அவரது நினைவுகளை பகிர்ந்து இந்தியளவில் அந்த ஹாஷ்டேக்கை தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











