தமிழ் நடிகைகளுக்கு நடிக்கவே தெரியாது.. வம்புக்கு இழுத்த மாளவிகா மோகனன்.. பஞ்சாயத்து ஸ்டார்ட்
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் தமிழில் மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் அவர் கடைசியாக தி ராஜா சாப் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். இந்நிலையில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் தமிழ் நடிகைகள் சிலருக்கு நடிக்க தெரியாது என சொன்னது கோலிவுட் ரசிகர்களிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் மலையாள திரையுலகில் பிரபலமான கேமரா மேன் மோகனனின் மகள். தந்தையின் அனுமதியோடு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்தார். அதனையடுத்து ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்தார். கொஞ்ச நேரமே படத்தில் வந்தாலும் அவருக்கு அழுத்தமான கேரக்டராக அது அமைந்தது.
தமிழிலும் பிஸி: பேட்ட படத்தின் வெற்றி மற்றும் மாளவிகா மோகனன் மீதான ஈர்ப்பு அவருக்கு மேற்கொண்டு வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. அந்தவகையில் விஜய் படமான மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன், பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்தார். பேட்ட, மாஸ்டருக்கு பிறகு அவர் நடித்த எந்தப் படமும் ஹிட்டாகவில்லை. தங்கலான் படத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருந்தார். ஆனால் படம் செல்ஃப் எடுக்கவில்லை.

தெலுங்கில் மாளவிகா: அடுத்ததாக கார்த்திக்கு ஜோடியாக சர்தார் 2 படத்தில் நடித்துவருகிறார். இதை தவிர்த்து வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் கமிட்டாகவில்லை என தெரிகிறது. இதற்கிடையே தெலுங்கில் பிரபாஸுடன் தி ராஜா சாப் படத்தில் நடித்தார். அதுவும் பெரிதாக ஹிட்டாகவில்லை. அப்படத்தில் மாளவிகாவின் கிளாமர் கொஞ்சம் ஓவர் டோஸாகவே போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் நடிகைகள் பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மாளவிகா மோகனனின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "தமிழ், தெலுங்கு நடிகைகள் சிலர் சரியாக நடிப்பதில்லை. சோக காட்சிகளில் அவர்கள் மனதுக்குள் 1,2,3,4 என எண்ணிக்கொண்டு சோகமான முக பாவனைகளை வெளிப்படுத்துகிறார்கள். கோப காட்சிகள் என்றால் ஏ,பி,சி,டி என சொல்லிக்கொண்டு ஒரே மாதிரி நடிக்கிறார்கள். அவர்கள் தங்களது உதட்டசைவை மட்டும் சரியாக செய்து டப்பிங்கில் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு படத்துக்கு மட்டும் அவர்கள் இப்படி செய்வதில்லை; தங்கள் கரியர் முழுவதும் இதையே செய்கிறார்கள்" என்றார்.
ரசிகர்கள் கொந்தளிப்பு: மாளவிகாவின் இந்த பேச்சு கோலிவுட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் நடிகைகளின் நடிப்பை பற்றி பேசும் மாளவிகா பெரிதாக என்ன நடித்துவிட்டார்; தங்கலானில் அவர் நடிப்பு சிரிப்பைத்தான் வரவழைத்தது இவரெல்லாம் நடிப்பு குறித்து பேசலாமா என கேள்வி எழுப்பிவருகிறார்கள். முன்னதாக இதே போன்றொரு பேட்டியில் தமிழ் நடிகையின் பெயரை குறிப்பிடாமல் மருத்துவமனை காட்சியில் மேக்கப்போடு நடிக்கிறார் என கூறியிருந்தார். அது நயன்தாராவைத்தான் சொன்னார் என்ற கருத்து நிலவியது. அதற்கு நயனும், தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











