சிம்புவை தொடர்ந்து தனுஷ் படத்தையும் இழந்த டிராகன் ஹீரோயின்.. கோலிவுட்டுக்கு ஒரேயடியாய் குட்பை?
சென்னை: டிராகன் படத்தின் மூலம் இந்த ஆண்டு ஏகப்பட்ட கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த நடிகை கயாடு லோஹர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கப் போவதாக ஏகப்பட்ட அலப்பறைகள் கிளம்பின. ஆனால், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்த ரெய்டு நடவடிக்கைக்குப் பிறகு கயாடு லோஹருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் அப்படியே குறைந்து போய்விட்டன.
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த 49வது படத்தில் கயாடு லோஹர் தான் ஹீரோயினாக புக் ஆகியிருந்தார். சிம்பு படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்திலும் கயாடு லோஹர் தான் ஹீரோயின் என பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

இந்நிலையில், அந்த படத்தில் கயாடு லோஹர் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த வாய்ப்பு யாருக்கு கிடைத்துள்ளது என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.
டிராகன் படத்திலேயே தாராள கவர்ச்சி: அசாமில் பிறந்து வளர்ந்த கயாடு லோஹர் மலையாளப் படங்களில் நடித்து வந்த நிலையில், தமிழில் டிராகன் படத்தின் மூலம் இந்த ஆண்டு அறிமுகமானார். முதல் படமே அவருக்கு தமிழில் 150 கோடி வசூல் படமாக மாறியது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இதயம் முரளி படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார். சிம்புவுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க இனிமேல் கோலிவுட் குயின் இவர் தான் என கொண்டாடப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து இம்மார்ட்டல் எனும் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு: விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் மமிதா பைஜு அடுத்து சூர்யாவின் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். சூர்யாவை தொடர்ந்து தற்போது போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள தனுஷின் 54வது படத்தில் மமிதா பைஜு தான் ஹீரோயின் என்றும் கயாடு லோஹர் கிடையாது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவிக்கும் என தெரிகிறது.
இட்லி கடை ரிலீஸில் மாற்றமில்லை: ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமா என ரசிகர்கள் பயந்து வந்த நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 1ம் தேதி படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. குபேரா படம் தெலுங்கில் 120 கோடி வரை வசூல் செய்த நிலையில், இட்லி கடை படமும் அவருக்கு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை 2 கஷ்டம் தான்: வெற்றிமாறன் சிம்புவை வைத்து வடசென்னை யூனிவர்ஸில் படம் இயக்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்த படம் முடிந்த பின்னர் தான் வடசென்னை 2 பக்கம் தனுஷ் செல்வார். ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படுபிசியாக சுழன்று சுழன்று நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். போர் தொழில் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், தனுஷுக்கு அடுத்த படமும் பிளாக்பஸ்டர் தான் என்கின்றனர். நடிகை கயாடு லோஹர் மலையாளத்தில் டொவினோ தாமஸ் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











