முதல் பாகத்திலேயே அப்படி என்றால்.. இரண்டாவது பாகத்தை சொல்லணுமா?.. ஜெயிலர் 2 பற்றி பற்றி மிர்ணா ஓபன் டாக்
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கிவருகிறார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட்டடித்திருப்பதால் இந்த பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. படத்தின் ஷூட்டிங் கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடந்துவருகிறது. இதிலும் பான் இந்தியா ஸ்டார்கள் களமிறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த முக்கியத்துவத்தை படத்தில் இயக்குநர் கொடுத்திருப்பார் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் 1ல் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்த மிர்ணா மேனன்; தற்போது இரண்டாவது பாகம் குறித்து பேசியிருக்கிறார்.
ரஜினி நடித்த கூலி படத்தின் ரிசல்ட்டை எல்லோருமே அறிவார்கள். அதை பற்றி டீட்டெயிலாக சொல்லவே வேண்டாம். லோகேஷின் கரியரிலேயே மிகப்பெரிய கரும்புள்ளியை அவருக்கு இப்படம் எடுத்து கொடுத்துவிட்டது. ரஜினியும் இந்த ரிசல்ட்டை எதிர்பார்க்கவில்லைதான். கமலுக்கு எப்படி தரமான ஹிட்டை விக்ரமில் கொடுத்தாரோ அதேபோல் தனக்கும் கொடுப்பார் என்று நினைத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே அடுத்த படத்தில் இன்னமும் வீரியமாக வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2வில் நடிக்க சென்றுவிட்டார் ரஜினி.

பெரிய எதிர்பார்ப்பு படத்துக்கு: இப்படத்தின் முதல் பாகம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. ரஜினி, நெல்சன் ஆகியோரின் கரியருக்கே அந்தப் படம்தான் புது ஆக்சிஜனை கொடுத்தது என்று சொல்லலாம். ஏனெனில் அதற்கு முன்னர் நெசல்ன் இயக்கிய பீஸ்ட், ரஜினி நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்திருந்தன. அதுமட்டுமின்றி இரண்டு பேரின் கரியரும் இனி அவ்வளவுதான்; வீட்டுக்கு போக வேண்டியதுதான் என்றெல்லாம் பேசினார்கள்.
தரமான கம்பேக்: ஆனால் அப்படி பேசியவர்களின் வாயை படத்தின் மூலம் இரண்டு பேருமே அடைத்துவிட்டார்கள். மேக்கிங், மாஸ், சென்ட்டிமென்ட் என அத்தனை ஏரியாக்களிலும் படம் புகுந்து விளையாடியதால் மிகப்பெரிய ஹிட்டை பெற்றது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்தது. குறிப்பாக நெல்சன் மீது ரஜினி வைத்திருந்த நம்பிக்கையும் காப்பாற்றப்பட்டது. முதல் பாகம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தோடு இப்போது ஜெயிலர் 2 படத்தில் இணைந்திருக்கிறது இந்தக் கூட்டணி. படத்தின் ஷூட்டிங் கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
பான் இந்தியா ஸ்டார்கள்: தற்போது தமிழ் படங்களில் பாலிவுட் நடிகர்களை களமிறக்குவது அதிகரித்துவிட்டது. ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் என பான் இந்தியா ஸ்டார்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திலும் பான் இந்தியா நடிகர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். பாலைய்யா, ஷாருக்கான், வித்யா பாலன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறதாம். அத்தனை பேருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ரோலை இயக்குநர் கொடுத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.
மிர்ணா மேனன் பேட்டி: இந்நிலையில் ஜெயிலர் 1ல் ரஜினிக்கு மருமகளாக நடித்த மிர்ணா மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 குறித்து பேசியிருக்கிறார். அவர் கொடுத்த பேட்டியில், "ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின்போது ஒரு பேட்டியில், 'ஜெயிலர் 1 படத்தின் இடைவேளை காட்சி மாதிரி இதற்கு முன்னரும் வந்ததில்லை; இதற்கு பிறகும் வரப்போவதில்லை என கூறியிருந்தேன். முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்தின் இடைவேளை காட்சியும் தரமாக இருக்கும். முதன்முறை ரஜினியை செட்டில் பார்த்தபோது, வயதானாலும் உங்கள் ஸ்டைலும் அழகும் போகல என்ற படையப்பா வசனம்தான் எனது மனதில் ஓடியது. அவர் அருமையான மனிதர்" என்றார்.


Click it and Unblock the Notifications















