நடிகைகள் வெறும் கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது... நடிகை பிரதைனி சர்வா!
சென்னை: நடிகைகள் வெறும் கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது என நடிகை பிரதைனி சர்வா தெரிவித்துள்ளார்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க கே.ஆர்.சந்துரு இயக்கும் படம் போதை ஏறி புத்தி மாறி. திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு கேபி இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். பல குறும்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்ற தீரஜ் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
பிரபல மாடல் அழகி பிரதைனி சர்வா இப்படத்தின் மூலம் நடிகையாகிறார். மாடலிங் துறையில் இருந்து நடிகையாக மாறியது எப்படி என்பது குறித்து அவர் விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
"தனிப்பட்ட முறையில், திரைப்படங்களில் சில பெண் கதாபாத்திரங்களை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவை பார்வையாளர்களை ஊக்குவிக்கும் அல்லது உற்சாகப்படுத்தும். நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகள் அல்லது கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது என்பதை நான் நம்புகிறேன்.

இயக்குனர் சந்துரு எனக்கு கதையையும், என் கதாபாத்திரத்தையும் விளக்கிய போது, என் கதாபாத்திரம் பிருந்தாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. வெறுமனே என் கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாக இருந்தது.
இயக்குனர் சந்துருவை பாராட்டும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை, ஆனால் கே.ஆர்.சந்துரு உண்மையில் திறமை வாய்ந்த இயக்குனர், அவரது திறமையை திரையுலகம் கண்டிப்பாக புகழும்" என்றார்.


Click it and Unblock the Notifications











