ஒரே நேரத்தில் இரண்டு பட ஷூட்டிங்குகளைச் சமாளிக்கும் நயன்தாரா!
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழில் நயன்தாரா உச்சத்திலிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம், அவரது நேரந்தவறாமையும், தொழில் நேர்த்தியும்தான் என்பார்கள் திரையுலகில்.
காதல் விவகாரங்கள், தனிப்பட்ட மனக்கசப்புகள் எதுவும் அவரது சினிமா பயணத்தை பாதித்ததில்லை. அப்படி பாதித்திருந்தால் அவரால் சிம்புவுடன் நடிக்கத்தான் முடியுமா!

நயன்தாரா இப்போது முகாமிட்டிருப்பது கும்பகோணத்தில். தமிழ் சினிமாக்காரர்கள் ஒரு காலத்தில் கோபிச் செட்டிப்பாளையத்தை குட்டி கோடம்பாக்கமாக மாற்றியிருந்தார்கள். இப்போது அவர்கள் மோகம் கும்பகோணத்தில்.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நண்பேன்டா, சிம்புவை வைத்து பாண்டிராஜ் இயக்கும் இது நம்ம ஆளு ஆகிய இரு படங்களின் ஷூட்டிங்குகளும் கும்பகோணத்தில்தான் நடந்து வருகின்றன.
இரண்டு படங்களுக்கும் வெவ்வேறு தேதிகள்தான் கொடுத்திருந்தார் நயன்தாரா. ஆனால் இது நம்ம ஆளு படம் இடையில் தாமதமானதால், இப்போது இரண்டு படங்களும் ஒரே தேதியில் முட்டிக் கொண்டன.
ஆனாலும் இரு படங்களுக்கும் ஷூட்டிங் ஸ்பாட் கும்பகோணம் என்பதால், இரண்டு படப்பிடிப்புகளையுமே சமாளிக்கும் முடிவோடு போனார் நயன்தாரா.
காலையில் உதயநிதியின் நண்பேன்டா படத்தில் கலந்து கொண்டவர், மாலையில் இது நம்ம ஆளு படத்தின் பாடல் காட்சியில் கலந்து கொண்டார். கடந்த ஆறேழு நாட்களாக இப்படித்தான் சமாளித்து வருகிறார், எந்த பிரச்சினையும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications











