அல்லு அர்ஜுனை அசிங்கப்படுத்திய நயன்தாரா?.. அதான் வாய்ப்பு இல்லையா?.. இது என்ன புது பஞ்சாயத்து
சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விருது வழங்கும் மேடையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை நயன்தாரா அசிங்கப்படுத்திவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இதனால்தான் அவருக்கு வாய்ப்புகள் இல்லையோ என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர் சிம்புவை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்த அவருக்கு அந்தக் காதலும் கைகூடவில்லை. பிரபுதேவாவை காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக கூறி கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸ்: பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவருக்கு ராஜா ராணி, நானும் ரௌடிதான், அறம் என தான் நடிப்பதற்கு ஸ்பேஸ் உள்ள படங்கள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் இரண்டாவது இன்னிங்ஸில் வேறு மாதிரியான நயன்தாராவாக கலக்க தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் வழங்கினார்கள்.
காதல்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினார்கள். முதலில் அரசல் புரசலாக அந்தச் செய்தி வெளிவர தொடங்கியது. மேலும் அதில் உண்மை இருக்காது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் விருதுகள் வழங்கும் விழா உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு விக்னேஷ் சிவனும், நயனும் ஒன்றாக கலந்துகொள்ள ஆரம்பித்ததை அடுத்து அவர்களது காதல் உறுதியானது.
திருமணம்: இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு பேரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு நயன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் அவர் ஜவான், இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் கடைசியாக நடித்திருந்தார். இவற்றில் ஜவான் படம் மட்டும் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
அசிங்கப்படுத்திய நயன்: இந்நிலையில் அல்லு அர்ஜுனை நடிகை நயன் தாரா அசிங்கப்படுத்திவிட்டார் என்று கூறப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, 2016ஆம் ஆண்டு சைமா விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வருடத்துக்கான சிறந்த நடிகைக்கான (தமிழ்) சைமா விருது நயன் தாராவுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை வழங்குவதற்கு அல்லு அர்ஜுன் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
மேடைக்கு வந்த நயன்தாரா இந்த விருதை நான் விக்னேஷ் சிவன் கையால் பெற விரும்புகிறேன் என்று சொல்லி அவரது கையால் பெற்றுக்கொண்டார். அப்போது அல்லு அர்ஜுன் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். இந்த வீடியோவை பகிரும் ரசிகர்கள், 'அல்லு அர்ஜுன் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவரை வைத்துக்கொண்டு நயன் இப்படி செய்ததில் துளிக்கூட நியாயமில்லை' என்கின்றனர். அதேசமயம் நயன் ரசிகர்களோ, இதில் என்ன தவறு இருக்கிறது தனது காதலன் கையால் விருதை பெற விரும்பியிருக்கிறார் அவ்வளவுதான் என்று எதிர்க்கருத்தை முன்வைத்துவருகிறார்கள்.
அதான் வாய்ப்பு இல்லையா?: முன்னதாக தெலுங்கு சினிமாவில் நடிகை நயன் தாரா வெங்கடேஷ் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்திருக்கிறார். அதேசமயம் அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. சில வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனின் ஒரு படத்தில் நயனை நடிக்க வைக்க படத்தின் இயக்குநர் விரும்பியதாகவும்; ஆனால் சைமா விருதில் நயன் அப்படி நடந்துகொண்டதன் காரணமாக நயன் தாராவை நடிக்க வைப்பதற்கு அல்லு அர்ஜுன் விரும்பவில்லை என்றும் அரசல் புரசலாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன்: அல்லு அர்ஜுன் இப்போது பான் இந்தியா ஹீரோக்களில் ஒருவர். அவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மெகா ஹிட்டானது. தற்போது அவர் புஷ்பா 2 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்படமும் முதல் பாகம் போலவே மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் அல்லுவின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











