ஒரே குண்டும் குழியுமா இருக்கு... அலுத்துக் கொள்ளும் நயனதாரா
கடந்த ஏழு வருடமாக சென்னையில் தங்கி வாழ்ந்து வரும் நயனதாரா, இடையில் 2 காதல்களிலும் சிக்கி மீண்டு விட்டார். இத்தனை வருடங்களாக சென்னையிலேயே இருந்தாலும் சொந்தமாக வீடு வாங்கிக் கொள்ளவில்லை நயனதாரா. மாறாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்தான் நிரந்தரமாக தங்கியிருந்தார். ஹோட்டலில் நல்ல வசதி என்பதால் அங்கேயே ஜாகையை வைத்திருந்தார்.
அதேசமயம், ஹைதராபாத், கேரளா, மும்பை என இடையில் படப்பிடிப்புகளுக்காக போய்ப் போய் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இத்தனை காலம் தனக்கு சோறு போட்ட, இரண்டு காதல்களுக்கு அடிக்கல் நாட்டிய சென்னை நகரம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நயனதாரா.
அவர் கூறுகையில், சென்னையில் நான் நிறைய நேரம் செலவிட்டு உள்ளேன். இங்குள்ள பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் சில குறைகளும் உள்ளன. சென்னையில் உள்ள சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் நடந்து செல்லவும், வண்டிகளை ஓட்டிச் செல்லவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் ரோடுகள் குண்டும் குழியுமாகி மோசமாகி விடுகிறது.
ரோடுகளை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்தால் ரோடுகளில் தண்ணீர் நிற்காது. இந்த குறைகளை தவிர சென்னையை விரும்புவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் சென்னையை சுத்தமான, பசுமையான நகரமாக பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் நயனதாரா.
எனவே சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களே, முன்பை விட கடுமையாக உழைத்து நயனதாராவுக்கேற்றார் போல சென்னை மாநகர சாலைகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்...


Click it and Unblock the Notifications












