ஜவான் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது இதனால்தான்.. நயன்தாரா ஓபன் டாக்.. ஓஹோ இதான் விஷயமா?
நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். பிரபுதேவாவை காதலித்தபோது சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தார்.
நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.
தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் தற்போது அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமையல் கலைஞராக நயன் இதில் நடித்திருந்தார். படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
நிம்மதியான நயன்: அவர் பிஸியாக படங்களில் நடித்துவந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனமாக இருக்கிறார். அதிலும் தனது மகன்கள் மீது ரொம்பவே பிரியமாக இருக்கும் அவர் அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். சமீபத்தில்கூட தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் துபாய் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது.
நயன் பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேசுகையில், "ஷாருக்கானுக்கு யார்தான் ரசிகராக இல்லை. அவரது படங்களை பார்த்துதான் வளர்ந்திருக்கிறோம். எல்லோரும் அவரை நேசிக்கிறோம். அவர் மிகப்பெரிய நட்சத்திரம் என்பதை தாண்டி அவர் பெண்களை ரொம்பவே மதிப்பவர். அதனை நான் பாராட்டுகிறேன். ஜவான் படம் கண்டிப்பாக பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்று நான் உறுதியாக நம்பினேன். இத்தனை வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். எனவே ஒரு படம் எப்போது ஓடும் என்று தெரியும்" என்றார்.


Click it and Unblock the Notifications











