தமிழ் சினிமாவுக்கு கறார்.. மலையாள சினிமாவுக்கு கருணை.. சொந்த மொழி மீது குறையாத நயன்தாராவின் பாசம்
சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மண்ணாங்கட்டி படத்தை தமிழில் முடித்திருக்கிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து ஹிந்தியிலும் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
கேரளாவில் பிறந்தவர் மரியம் டயானா. தமிழில் ஐயா படத்தில் நயன்தாரா என்ற பெயரோடு அறிமுகமானார். ஹரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நயனின் அழகும் திறமையும் கோலிவுட்டை கவர்ந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதையடுத்து நயனின் கரியரில் வாய்ப்பு மழை பொழிந்தது.

முன்னணி நடிகை: அதன்படி விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். குறிப்பாக கிளாமர் ரோல்களை எந்தவித தயக்கமுமின்றி செய்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கையில் சில பிரச்னைகள் வந்ததைத் தொடர்ந்து நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். பிறகு ராஜா ராணி, அறம், நானும் ரௌடிதான் என தனது செகண்ட் இன்னிங்ஸை ஃபுல் பார்மோடு தொடங்கினார்.
திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்த நயன்; பல வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு விக்னேஷை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.
பிஸி நடிகை: திருமணமாகிவிட்டால் நடிப்பதற்கு தயங்கும் நடிகைகளுக்கு மத்தியில் நயன் அதை உடைத்துக் காட்டினார். தொடர்ந்து நடித்துவரும் அவர் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் அறிமுகமானார். அந்தப் படமும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. தொடர்ந்து தமிழிலும் கவனம் செலுத்திவரும் அவர்; கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறார்.
மலையாளத்தில் நயன்: தமிழ்,ஹிந்தி மட்டுமின்றி நயனின் சொந்த மொழியான மலையாளம் மீதும் அவரது கவனம் திரும்பியிருக்கிறது. அதன்படி டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி மம்மூட்டியை வைத்து கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் நயன் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளம் மட்டுமின்றி கன்னட படமான டாக்ஸிக்கிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார். இப்படி படு பிஸியாக இருக்கிறார் நயன்.
சம்பளத்தை குறைத்த நயன்?: இந்நிலையில் நயன்தாரா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு 10 முதல் 12 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவர்; மலையாள சினிமாவில் நடிப்பதற்கு தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களும், திரைத் துறையினரும் தமிழ் சினிமானா கறார் காட்டுறார்; மலையாள சினிமாவுக்கு விட்டுக்கொடுக்கிறார். சொந்த மொழி பாசம் எப்படி விட்டுப்போகும் என்று பேசிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











