நீங்க மனசு வச்சா அடுத்த வருசம் எனக்கு தல தீபாவளி தான் - பிரியா ஆனந்த் உற்சாகம்
சென்னை: நீங்கள் மனது வைத்தால் எனக்கு அடுத்த வருடம் தலை தீபவாளி தான் என்று தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகை பிரியா ஆனந்த் ஜாலியாக கூறினார். இந்த வருடம் பத்திரியாளர்களாகிய உங்களுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் கவிதா, செயலாளர் ஆபிரகாம் லிங்கன், துணைத் தலைவர் ராதா பாண்டியன், பொருளாளர் நவநீதன் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக நடிகை பிரியா ஆனந்த் கலந்துக் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார்.
பின்னர் நடிகை பிரியா ஆனந்த் பேசும்போது, நான் நிறைய விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த விழா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் எப்போதும் தீபாவளி கொண்டாட மாட்டேன். என்னுடைய பெற்றோர்கள் அமெரிக்காவில் இருப்பதால் என்னுடைய பாட்டி கூட தான் மிகவும் எளிமையாக தீபாவளி கொண்டாடுவேன்.
ஆனால், இந்த வருடம் பத்திரியாளர்களாகிய உங்களுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நானும் ஜர்னலிசம் படித்திருக்கிறேன். நான் சினிமா துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. வணக்கம் சென்னை படம் தான் நான் நடித்ததில் ரொம்ப பிடித்தது.
ஹீரோவுக்கு நிகராக என்னுடைய கதாபாத்திரமும் இருக்கும். இந்த 10 வருசத்துல எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தது தான். அவரை ரொம்ப மிஸ் பண்றேன். இந்தி நடிகைகளுக்கு கூட ஸ்ரீதேவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த வருடம் என்னுடைய நடிப்பில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்யா வர்மா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் நான் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். விக்ரம் சார் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஆதித்ய வர்மா திரைப்படம் வித்தியாசமாக புதுமையாக இருக்கும் என்றார்.
மிகவும் இளமையாக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் திரையில் பார்க்கும் போது பெரிய ஆளாக தெரிவேன். ஆனால், நேரில் பார்ப்பவர்கள் அப்படி தெரியவில்லை என்று சொல்லுவார்கள். சில நேரம் பிரியாணியை காலை உணவாக கூட சாப்பிடுவேன்.
ஆனால் நான் கடந்த ஒன்றரை வருடமாக சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். அதனால் கூட நான் குண்டாகாமல் இருக்கலாம். இதுவரை உடற்பயிற்சி அப்படி எல்லாம் இருக்கவில்லை என்றார்.
எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, நீங்கள் மனது வைத்தால் அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி தான் என்று ஜாலியாக கூறினார்.


Click it and Unblock the Notifications











