நடிகைனா ஈஸியாக தொடலாமோ?.. நாங்கள் என்ன பொம்மையா?.. நித்யா மேனன் விளாசல்
சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் நித்யா மேனன். தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது தனுஷுடன் இட்லி கடை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இதற்கு முன்னதாக தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நித்யா மேனன் ஹனுமன் என்ற இந்திய - ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1998ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதற்கு பிறகு 2006ஆம் ஆண்டு 7 O'Clock என்ற கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு ஆகாஷ கோபுரம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார்.
வரிசையான வாய்ப்புகள்: கன்னடத்திலும்,மலையாளத்திலும் தான் அறிமுகமான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அந்த மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மலையாளத்தில் வெள்ளதூவல், கேரளா கஃபே, ஏஞ்சல் ஜான், அபூர்வ ராகம், அன்வர் என வரிசையாக் நடித்தார். அந்தப் படங்களிலும் அவருக்கு சிறந்த நடிகை என்ற பெயர் கிடைத்தது. மலையாளத்தில் இப்படி பிஸியாக இருந்த அவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.

தமிழில் நித்யா மேனன்: இப்படி கன்னடம், மலையாளம், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து வந்த நித்யா மேனன் தமிழில் 180 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை,ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
திருச்சிற்றம்பலம்: அவரது தமிழ் கரியரில் ஓ காதல் கண்மணியும், திருச்சிற்றம்பலமும் முக்கியமான படங்களாக அமைந்தன. குறிப்பாக திருச்சிற்றம்பலத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருப்பார். குறிப்பாக பாரதிராஜாவுடன் இணைந்து அவர் செய்யும் சேட்டைகளும், தனுஷ் மேல் இருக்கும் காதலை வெளிக்காட்ட முடியாமல் திணறும் இடத்திலும் நித்யா மேனனின் நடிப்பு அப்ளாஸை அள்ளியது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்துக்காக அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இட்லி கடை: அவர் இப்போது மீண்டும் தனுஷுக்கு ஜோடியாக இட்லி கடை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை தனுஷே இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் இந்த ஜோடிக்கு அமோக வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நித்யா அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
நித்யா மேனனின் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "பலரும் ஒரு சாதாரண பெண்ணிடம் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படி நடிகைகளிடம் நடந்துகொள்வதில்லை. நடிகை என்றால் ஈஸியாக தொட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் ஒரு விழாவுக்கு போனால் ரசிகர்கள் கையை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியை சாதாரண பெண்ணிடம் யாருமே கேட்கமாட்டார்கள். ஆனால் நடிகைகள் சாதாரணமாக கேட்கிறார்கள். ஈஸியாக தொட்டுவிட நாங்கள் என்ன பொம்மையா?" என்றார். அவரது இந்தப் பேட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











