கை முழுக்க சாணம்.. தேசிய விருது வாங்கும்போதுகூட அப்படித்தான் இருந்தது.. நித்யா மேனன் ஓபன் டாக்
சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் நித்யா மேனன். இப்போது தமிழில் அவர் தலைவன் தலைவி, இட்லி கடை ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களுமே விரைவில் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் தனுஷுடன் இட்லி கடை படத்தில் நடித்த அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் நித்யா மேனன்
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நித்யா மேனன் ஹனுமன் என்ற இந்திய - ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1998ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதற்கு பிறகு 2006ஆம் ஆண்டு 7 O'Clock என்ற கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு ஆகாஷ கோபுரம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார்.
வரிசையான வாய்ப்புகள்: கன்னடத்திலும்,மலையாளத்திலும் தான் அறிமுகமான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அந்த மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மலையாளத்தில் வெள்ளதூவல், கேரளா கஃபே, ஏஞ்சல் ஜான், அபூர்வ ராகம், அன்வர் என வரிசையாக் நடித்தார். அந்தப் படங்களிலும் அவருக்கு சிறந்த நடிகை என்ற பெயர் கிடைத்தது. மலையாளத்தில் இப்படி பிஸியாக இருந்த அவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.

தமிழில் நித்யா மேனன்: இப்படி கன்னடம், மலையாளம், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து வந்த நித்யா மேனன் தமிழில் 180 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை,ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தேசிய விருது பெற்ற நித்யா மேனன்: அவரது தமிழ் கரியரில் ஓ காதல் கண்மணியும், திருச்சிற்றம்பலமும் முக்கியமான படங்களாக அமைந்தன. குறிப்பாக திருச்சிற்றம்பலத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருப்பார். குறிப்பாக பாரதிராஜாவுடன் இணைந்து அவர் செய்யும் சேட்டைகளும், தனுஷ் மேல் இருக்கும் காதலை வெளிக்காட்ட முடியாமல் திணறும் இடத்திலும் நித்யா மேனனின் நடிப்பு அப்ளாஸை அள்ளியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்காக அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய படங்கள்: திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு தமிழில் நல்ல பெயரையும், தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்ததால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எனர்ஜியோடு இருக்கிறார் நித்யா. அவர் இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படத்திலும், தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். மீண்டும் தனுஷும், நித்யா மேனன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
நித்யா மேனன் பேட்டி: இந்நிலையில் அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "இட்லி கடை படத்தில் சாணத்தை என் கைகளால் சுத்தம் செய்தேன். முதன்முறையாக அதை செய்தேன். தேசிய விருது வாங்க செல்வதற்கு ஒருநாள் முன்பு அந்தக் காட்சியில் நடித்தேன். விருதை பெறும்போது எனது விரல் நகங்களில் மாட்டு சாணம் இருந்தது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது" என்றார்.அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது


Click it and Unblock the Notifications











