என்னை சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. நிவேதா பெத்துராஜ் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் நிறைவு!
சென்னை: 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் கடந்த 2016ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 10 ஆண்டுகளை கடந்து விட்டதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி குறிப்பாக திரையுலகில் நடிகைகள் 5 ஆண்டுகளை கடப்பதே பெரிய விஷயமாக உள்ளது. த்ரிஷா, நயன்தாரா போன்ற வெகு சிலரே 23 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா உலகில் ஹீரோயின்களாக அசத்தி வருகின்றனர்.

ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்த நிவேதா பெத்துராஜ் அதன் பின்னர், மெண்டல் மதிலோ எனும் படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமானார்.
சினிமாவில் 10 ஆண்டுகள்: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ரித்விகா உள்ளிட்டோர் நடித்த ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ். பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல், Boo உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நிவேதா பெத்துராஜ்.
3 ஆண்டுகளாக படமில்லை: 2023ம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் என பைலிங்குவல் படமான வெளியான Boo படத்தில் நடித்தார். அதன் பின்னர் இரு மொழிகளிலும் பெரிதாக அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக படங்களே இல்லை. கடைசியாக 2024ம் ஆண்டு தெலுங்கில் வெளியான பருவு எனும் வெப்சீரிஸில் நடித்தார். அதன் பின்னர், ஓடிடியில் கூட பெரிதாக நிவேதா பெத்துராஜுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
என்னை சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி: "சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. என்னை நம்பியவர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும், எனக்கு போட்டியாக இருந்தவர்களுக்கும், என்னை சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி" என எக்ஸ் தளத்தில் நிவேதா பெத்துராஜ் பதிவிட்டுள்ளார். பழையபடி நிறைய படங்களை கமிட் செய்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். பல இளம் நடிகைகள் கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போன அதிர்ச்சி சம்பவங்களும் நடந்திருப்பதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications