ரொம்ப வல்கர்.. நோரா ஃபதேகி குத்தாட்ட பாடலுக்கு வச்சாச்சு வேட்டு.. வடபோச்சே!
பெங்களூர்: கன்னடத் திரைப்படமான 'KD - தி டெவில்' படத்தில் இடம்பெற்ற "சர்க்கே சுனார் தேரி சர்க்கே" பாடல், ஆபாசமான வரிகள் மற்றும் கவர்ச்சியான நடனம் காரணமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நோரா ஃபதேஹி, சஞ்சய் தத் நடித்த இப்பாடலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
சமீபத்திய தகவலின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) இப்பாடல் தொடர்பாக சட்ட அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பாடல் யூடியூப் மற்றும் பிற தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் வினித் ஜிண்டால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) மற்றும் தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) ஆகியவற்றிடம் புகார் அளித்தார். இந்த முறையீட்டை அடுத்து, பாடலுக்கான எதிர்ப்பு மேலும் தீவிரமடைந்தது என ஏஎன்ஐ தெரிவித்தது.
ஆபாசமான பாட்டுக்கு வேட்டு: இப்பாடல் "மிகவும் ஆபாசமானது, பாலியல் தூண்டுதல் கொண்டது, அருவருக்கத்தக்க வெளிப்பாடுகளைக் கொண்டது" என ஜிண்டால் கண்டனம் செய்தார். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். சமூக வலைத்தளங்களில் இதன் பரவல் குறித்தும் ஜிண்டால் அதிருப்தி தெரிவித்தார். குறிப்பாக, பாடலின் வரிகள் ஆட்சேபனைக்குரியவை என்றும், சிறார்களுக்குப் பொருத்தமற்றவை என்றும் அவரது புகார் தெளிவாக சுட்டிக்காட்டியது.
பாய்ந்தது வழக்கு: பாடலாசிரியர் ரகீப் ஆலம், இயக்குநர் பிரேம், இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, பாடகி மங்ளி ஆகியோரின் பெயர்கள் புகாரில் இடம்பெற்றன. இப்பாடல் குறித்து டெல்லி காவல்துறை சைபர் பிரிவில் தனி குற்றவியல் புகார் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனந்த் ஆடியோ நிறுவனம் இப்பாடலை ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் யூடியூப்பில் பதிவேற்றியது. ஆனால், புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, பாடலின் அனைத்து வீடியோக்களும் தளத்தில் இருந்து நீக்கப்பட்டன.
இருப்பினும், பாடலின் வரிகள் மட்டுமே கொண்ட நகலெடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆன்லைனில் இன்னமும் கிடைக்கின்றன. மேலும், சில குட்டி குட்டி பாடல் வீடியோக்கள் தொடர்ந்து பரவி வருகின்றன.
பாலிவுட் பிரபலங்கள் கண்டனம்: நடிகை கங்கனா ரனாவத் இந்த சர்ச்சைக்குக் கடுமையாக எதிர்வினையாற்றினார். ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், கன்னடப் பாடலில் உள்ள ஆபாசத்திற்கு பாலிவுட்டை குற்றம்சாட்டினார். அவர், "பாலிவுட் ஆபாசம், தந்திரங்கள், கவன ஈர்ப்பு என அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டது என்றார். நோரா ஃபதேகி, சஞ்சய் தத் பாலிவுட் நடிகர்கள் என்பதால் அவர் இப்படி பேசியுள்ளார்.
"ஒட்டுமொத்த நாடே அவர்களைக் கண்டிக்கிறது. ஆனால், அவர்களுக்கு வெட்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை... இதுபோன்ற ஆபாசமான காட்சிகளைக் காண்பிப்பதில் இன்னும் கடுமையான விதிமுறைகள் வேண்டும். குடும்பத்துடன் டிவி பார்ப்பது சிரமம். பாலிவுட் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்," என்றார்.
திரைப்பட இயக்குநர் ஓனிரும் இச்சம்பவத்தைக் கண்டித்துப் பேசியுள்ளார். பாடலுக்கு அனுமதி அளித்த CBFC-யை அவர் குறை கூறினார். தனது பதிவில், "சென்சார் போர்டு #GhooskhorPandat திரைப்படப் பெயரிடலில் பிஸியாக உள்ளது. நாம் விசித்திர நாடாக மாறுகிறோம்... காதலர் தின கொண்டாட்டங்கள், மதங்கள் தாண்டிய திருமணம் ஆகியவற்றை எதிர்த்து, இந்த குப்பைகளுக்கு ஓகே சொல்கிறோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.
ரொம்பவே வல்கரான வார்த்தைகளை கொண்ட பாடலில் நடித்த நோரா ஃபதேகி தமிழில் காஞ்சனா 4 படத்தில் நடித்துள்ளார். மேலும், ஜெயிலர் 2 படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல். தொடர்ந்து கேவிஎன் தயாரிப்பு படங்கள் சென்சார் போர்டில் சிக்கி தவிப்பதாகவும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











