மலையாள திரையுலகில் பாலியல் தொல்லை.. ஹேமா கமிட்டி குறித்து அதிரடி கருத்து தெரிவித்த நடிகை
திருவனந்தபுரம்: இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளான விஷயத்தில் ஒன்றுதான் ஹேமா அறிக்கை. மலையாள திரையுலகில் நடிகைகள் முதல் பெண் ஊழியர்கள்வரை நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிஷனின் அறிக்கையில் இருக்கும் அம்சங்கள் வெளியானதால் கேரள திரையுலகில் பெரும் புயல் வீசியது. இப்படிப்பட்ட சூழலில் நடிகை பார்வதியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்கள் சிலர். அந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதேபோல் சுனில் என்பவரும் சைது செய்யப்பட்டார். அந்த விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைக்கப்பட்ட ஹேமா கமிஷன்: இந்த விவகாரத்தை அடுத்து மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது; அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று மலையாள திரையுலகிலிருந்து சில நடிகைகள் கோரிக்கையை முன் வைத்தார்கள்.அதனை ஏற்றுக்கொண்ட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தார்.
முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு: அந்த கமிஷனில் ஹேமா தவிர்த்து நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரித்து தங்களது அறிக்கையை 2019ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். ஆனால் அந்த அறிக்கையில் என்னவிருந்தது என்பது வெளியிடப்படாமலேயே இருந்தது. அதற்கு காரணம் பலர் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நடந்த விஷயங்களை கூறியிருப்பதாக கூறப்பட்டது. அதேசமயம் அந்த விஷயத்தை தவிர்த்து பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் உரிமை ஆணையம் தெரிவித்திருந்தது.

தள்ளுபடி செய்த நீதிமன்றம்: ஆனால் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிடவேக்கூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் கேரளாவில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒருவரின் தனியுரிமையை பாதிக்காத வண்ணம் அறிக்கையை வெளியிடலாம் என்று தகவல் உரிமை ஆணையம் கூறியிருப்பதை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்தச் சூழலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது.
திடுக்கிடும் தகவல்கள்: அதில் ஏகப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் ஜெயசூர்யா, சித்திக், முகேஷ், இயக்குநர் ரஞ்சித் என பலரும் குற்றம்சாட்டப்பட்டனர். மேலும் மலையாள திரையுலக சங்கமான AMMA என்ற அமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் மோகன் லால் விலகினார். பெரும் புயலை கிளப்பிய அந்த கமிஷன் விவகாரம் இப்போது சைலெண்ட்டாகிவிட்டது. அதுமட்டுமின்றி அந்த கமிஷனின் அறிக்கையில் வந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து பதியப்பட்ட வழக்குகளை கைவிட கேரளா காவல் துறை திட்டமிட்டிருபப்தாகவும் சமீபமாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன.
பார்வதி இன்ஸ்டா: இந்நிலையில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹேமா கமிஷன் குறித்து ஸ்டோரி வைத்திருக்கிறார். அதில் அவர், "இந்த கமிஷன் அமைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை கவனிக்கலாமா?. தொழில்துறையில் ஒழுங்குமுறைகளை உருவாக்க உதவும் கொள்கைகளை எப்போது அமல்படுத்துவது? அதில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது. அவசரம் இல்லையா?.. ஹேமா கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு வருடங்கள்வரை ஆகிவிட்டதே" என்று போஸ்ட் செய்திருக்கிறார். அவர் இப்போது மீண்டும் இதனை கிளப்பியிருப்பதால் ஹேமா கமிஷன் விவகாரம் சூடுபிடிக்கும் என்ற பேச்சுக்கள் மலையாள திரையுலகில் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











