நான் பிரசாரத்திற்குப் போகும் இடமெல்லாம் பார்க்கிறேன், நல்ல ஆதரவு இருக்கிறது- குஷ்பு

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகை குஷ்புவை இறக்கி விட்டுள்ளது திமுக தலைமை. அவரும் வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து நேற்று தீவிரப் பிரசாரம் செய்தார். அவரை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடி குஷ்புவின் பேச்சை ரசித்தனர்.
குஷ்பு பேசுகையில்,
சிறுபான்மையினத்தைச் சார்ந்த அண்ணன் மரியம் பிச்சை அவர்கள், எதிர்பாராத விதமாக மரணம் அடைந்த போது, அதிமுகவின் தலைமை மீண்டும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்.
ஆனால், ஜெயலலிதாவோ, சிறுபான்மையினத்தைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர். திமுகவை மைனாரிட்டி, மைனாரிட்டி என்று விமர்சனம் செய்வதோடு சரி. ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடி. மதக் கலவரங்களுக்கெல்லாம் காரணமானவர் என்று விமர்சனத்துக்குள்ளானவர் நடத்திய உண்ணாவிரதத்திற்கு, இவருடைய பிரதிநியாக இரண்டு பேரை ஆதரவு தெரிவிப்பதற்காக அனுப்பி வைத்தார்.
பரமக்குடியிலோ அப்பாவித் தலித் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அவருக்கு நேரமில்லை. அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களையாவது அனுப்பியிருக்கலாம்.
தலித்துக்களையோ, சிறுபான்மையினரையோ கண்டுகொள்ளாத ஜெயலலிதா, எங்கே திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் இங்கே 15 அமைச்சர்களை தேர்தல் பணிக்கு அனுப்பியுள்ளார்.
தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார்கள். இந்த முறை தவறை நீங்கள் திருத்திக் கொள்வீர்கள்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். நானும் பிரச்சாரம் செய்யும் இடங்களையெல்லாம் பார்க்கிறேன். மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. நீங்கள் நல்ல முடிவை எடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
திமுககாரர்கள் மட்டுமே தவறு செய்கிறார்கள் என்று சித்தரித்து தினமும் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இன்னாள் எம்எல்ஏக்களை கைது செய்துகொண்டிருக்கிறார். அந்த வேலையையே முழு நேரமாக செய்து கொண்டிருக்கிறார் என்றார் குஷ்பு.


Click it and Unblock the Notifications











