இப்படி பொலம்ப வச்சுட்டாங்களே, 'குத்து' ரம்யா விசனம்!

குத்து படம் புகழ் நடிகை ரம்யா தமிழில் அவ்வப்போது வந்து தலையைக் காட்டிவிட்டு போனாலும் கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட். அதனால் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க முன்னணி கன்னட ஹீரோக்கள் முண்டியடிக்கின்றனர்.
இந்த நிலையில் திடீரென குத்து ரம்யா அரசியலில் குதித்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது கொண்ட அபிமானத்தால் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். சேர்ந்தவுடனேயே வளர்ச்சி ஏணியின் உச்சானி கொம்பிற்கு செல்லப் பார்த்தார். அதாவது கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார்.
'கத்து'க் குட்டியாக இருந்து கொண்டு 'குத்து' ரம்யா மூத்த காங்கிரஸ் தலைவர் போல செயல்படுகிறாரே என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமுறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரம்யாவின் அறிவிப்பு அவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியது. உடனே தலைமைக்கு புகார் பறந்தது. தன் இஷ்டத்திற்கு அவர் பேசி வருகிறார் என்று புகார் கூறினர்.
இதையடுத்து ரம்யாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடடா, இந்த அரசியல் மகா ஷாக்கான விஷயம் போலிருக்கே என்று பயந்து போன குத்து ரம்யா, தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இப்போது, ஆசைப்பட்டு அரசியலுக்குப் போனேனே இப்படி என்னை ஓரங்கட்டுகிறார்களே என்று நெருங்கியவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











