பிரபுதேவாவின் மகளை பார்த்தீங்களா.. அப்படியே அச்சு அசல் அப்பாவைப் போல!
சென்னை: இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக இருக்கிறார் பிரபுதேவா. இவருடைய நடனத்துக்கும், நடன அமைப்புகளுக்கும் என ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கிறார். இவர், தனது இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் 'ராஜா ராஜாதி ராஜா' என்ற பாடலில் க்ரூப் டான்சராக ஆடி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்த அர்ஜூன் நடித்த ஜென்டில்மென் திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.

காதல் திருமணம்: பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பிஸியாக இருந்தபோது, அவரது குரூப்பில் டான்சராக இருந்தவர் தான் ரமலத். முஸ்லிம் பெண்ணான ரமலத்தை பிரபுதேவா காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் சுந்தரம் மாஸ்டருக்கு தெரியவர, அவர் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அப்பாவின் எதிர்ப்பை மீறி பிரபுதேவா, ரமலத்தை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தால், குடும்பத்தில் எதிர்ப்பு இருந்த போதும், பிரபு தேவா தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்த்து வந்ததன் அடையாளமாக மூன்று குழந்தைகள் பிறந்தன.

முதல் மனைவியை பிரிந்தார்: ஒருகட்டத்தில் ரமலத் தனது கணவருக்காக முஸ்லிம் மதத்தில் இருந்து இந்துவாக மாறி தனது பெயரை லதா என மாற்றிக் கொண்டார். ஆனால், பிரபுதேவா குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடி காரணமாகத்தான் அவர் மதம் மாறினார் என்று சொல்லப்பட்டது. அந்த நேரத்தில் தான் பிரபுதேவாவின் மூத்த மகன் புற்றுநோயால் 2008ம் ஆண்டு தனது 13 வயதில் இறந்தார். மனவேதனையில் இருந்த பிரபுதேவா நடிப்பதை விட்டு, விஜய், நயன்தாராவை வைத்து வில்லு படத்தை இயக்கினார். அப்போது, நயன்தாராவிற்கும் இவருக்கும் நட்பு ஏற்பட, இருவரும் லிவ்விங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இது அப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
பிரபுதேவாவின் மனைவி ரமலத், தனது கணவருடன் சேர்ந்து வாழ பல போராட்டத்தை செய்த போதும், அது முடியாமல் போக ஒரு கட்டத்தில், பிரபு தேவா ரமலத்தை விவாகரத்து செய்து பிரிந்தார். பின் நயன்தாராவை பிரபு தேவா திருமணம் செய்து கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இரண்டாவது திருமணத்திற்கு பின் எப்படி இருக்கிறார் தெரியுமா: இதையடுத்து, பிரபுதேவா பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபுதேவா முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த போது, அவருக்கு ஹிமானி சிங் தான் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து பெண் வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, 2023ம் ஆண்டு பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே மகன்கள் இருக்கும் நிலையில் இந்த குடும்பத்தில் முதல் பெண் குழந்தை என்பதால், எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரபுதேவா. தற்போது இவர் தனது மனைவி மற்றும் செல்ல மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











