நெஸ்வாடியா விவகாரம்: மும்பை கமிஷனரிடம் வாக்குமூலம் அளித்த பிரீத்தி ஜிந்தா
மும்பை: தனது முன்னாள் காதலர் நெஸ்வாடியா மீது பாலியல் புகார் கூறிய நடிகை பிரீத்தி ஜிந்தா, இன்று மும்பை போலீஸ் கமிஷனரிடம் வாக்குமூலம் அளித்தார்.
பிரபல இந்தி நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா கடந்த 12-ந் தேதி மும்பை மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த மே மாதம் 30-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிய ஆட்டத்தின்போது தனது தொழில் கூட்டாளியான நெஸ்வாடியா (வயது 44) தன்னை மானபங்கபடுத்தியதாக கூறியிருந்தார். மேலும் தன்னை இழிவுபடுத்தி பேசி மிரட்டல் விடுத்திருந்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

பிரீத்தி ஜிந்தாவின் புகாரின் பேரில் மும்பை போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
நெஸ்வாடியா மறுப்பு
பிரீத்தி ஜிந்தாவின் குற்றச்சாட்டை பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் பங்குதாரர்களில் ஒருவரும், அவருடைய முன்னாள் காதலருமான நெஸ்வாடியா மறுத்தார். தன் மீது அவர் பொய்யாக குற்றம் சுமத்தி உள்ளார் என்றும், இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் நெஸ்வாடியா கூறினார்.
ரகசிய வாக்குமூலம்
இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கு தொடர்பாக இருவரிடமும் ரகசிய வாக்குமூலமும் பெற்றனர். இதனிடையே புகார் கொடுத்த சில தினங்களில் பிரீத்தி ஜிந்தா, அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இதனால் அப்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி போலீசாரால் வாக்குமூலம் பெற முடியாமல் போய்விட்டது.
மும்பை கமிஷனர் அழைப்பு
இந்த புகார் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கடந்த புதன்கிழமை, அமெரிக்காவில் இருந்த பிரீத்தி ஜிந்தாவிடம் தொடர்பு கொண்டு விரைவில் மும்பைக்கு வந்து வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமையன்று மும்பை திரும்பினார்.
பேட்டி தர மறுப்பு
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை பேட்டி காண்பதற்காக செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால், செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.
இன்று வாக்குமூலம்
இந்த நிலையில் ரீத்தி ஜிந்தா இன்று (திங்கட்கிழமை) மும்பை போலீஸ் கமிஷனர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
மும்பை தாதா மிரட்டல்
இதனிடையே, நெஸ்வாடியாவின் தந்தை நுஸ்லி வாடியாவின் செயலாளருக்கு பிரபல மும்பை தாதா ரவி பூஜாரியின் பெயரில் செல்போனில் வந்த மிரட்டல் தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











