வாடியா விவகாரம் - வாங்கடே ஸ்டேடியத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் ப்ரீத்தி ஜிந்தா
மும்பை: தனது முன்னாள் காதலர் மீது பாலியல் புகார் கூறிய இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீசாரிடம் இன்று மாலை வாக்குமூலம் அளித்தார்.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது தன்னை தகாத வார்த்தைகளால், திட்டி, கண்ட இடத்தில் தொட்டு, தள்ளிவிட்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.

உன்னை காணாமல் ஆக்கிவிடுவேன் என்று நெஸ் தன்னை மிரட்டியதாக ப்ரீத்தி தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்கா சென்ற ப்ரீத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை திரும்பினார். இந்நிலையில் சம்பவம் நடந்த வாங்கடே ஸ்டேடியத்தில் வைத்து இன்று மாலை ப்ரீத்தி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
மாலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த ப்ரீத்தி நீண்ட நேரம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதில் அவர் என்ன சொல்லியுள்ளார் என்பது தெரியவில்லை.
முன்னதாக ப்ரீத்தியை தொந்தரவு செய்தால் வாடியா குழுமம் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று நிழல் உலக தாதா ரவி பூஜாரி நெஸ்ஸின் தந்தை நுஸ்லி வாடியாவை மிரட்டினார். இதையடுத்து நுஸ்லி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு வாடியா குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











