பணத்துக்காக தான் சொல்லவே இல்லை... அப்படி சொன்னாலும் என்ன தப்பு: பிரியா பவானி சங்கர் நச் பதிலடி
சென்னை: செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என வலம் வந்த பிரியா பவானி சங்கர், தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையாக காணப்படுகிறார்.
எஸ்ஜே சூர்யா, அருண் விஜய், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் குறித்து சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அதில் சீரியலை விட சினிமாவில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதால் தான் அவர் திரைத்துறைக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த விவாகரம் குறித்து பிரியா பவானி சங்கர் நச்சென பதிலடி கொடுத்துள்ளார். அதில், மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம் என்ற தலைப்புடன் கலாய்த்துள்ளார்.

சின்ன திரை டூ கோலிவுட்
பிரபல செய்தி தொலைக்காட்சியில் நியூஸ் ரீடராக வேலை பார்த்து வந்த பிரியா பவானி சங்கர், அங்கிருந்து சின்ன திரைக்குச் சென்று சீரியலில் நடிக்கத் தொடங்கினார். சீரியல், ரியாலிட்டி ஷோஸ் என கலக்கி வந்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, பிளட் மணி, யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து சிம்புவுடன் பத்து தல, ஜெயம் ரவியுடன் அகிலன் ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

பணத்துக்காக தான் சினிமாவில்
இதுவரை 13 படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்த பிரியா பவானி சங்கர், சீரியலில் இருந்து சினிமாவில் ஏன் நடிக்க வந்தேன் என கூறியதாக பேசினார் என சொல்லப்படுகிறது. மேலும் சீரியலை விட சினிமாவில் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்பதாகவும், அதனால் தான் திரையுலகில் அடியெடுத்து வைத்ததாகவும் பிரியா பவானி சங்கர் கூறியதாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது.

பிரியா பவானி சங்கர் பதிலடி
மேலும் தனக்கு முன்பின் அறிமுகமில்லாத திரைத்துறையில் தடம் பதிக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். வாய்ப்புகளை தேடி வாங்குவதில் மிகவும் கடினமாக உழைத்ததாகவும், ஒருகட்டத்தில் பணம் சம்பாதிப்பதை விட நல்ல பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்தேன் என பிரியா பவானி சங்கர் அந்த பேட்டியில் பேசியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த செய்தியை தனது ட்விட்டரில் ஷேர்செய்து பதிலடி கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

அப்படி சொல்லிருந்தா என்ன தப்பு?
அதில் மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம் என்ற வடிவேலுவின் காமெடி லைனை டேக் செய்துள்ள பிரியா பவானி, ஆரம்பத்தில் நான் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், எந்த நம்பகத்தன்மையும் இல்லாமல் வெளியான இந்த செய்தி குறித்து விளக்கம் கொடுக்கிறேன். முதலில் நான் பணத்துக்காக சினிமாவிற்கு வந்தேன் என சொல்லவே இல்லை. ஒருவேளை அப்படி சொல்லிருந்தாலும் என்ன தப்பு?. எல்லோருமே பணத்துக்காக தான் வேலை பார்க்கிறார்கள். நடிகர்கள், நடிகைகள் என்றால் மட்டும் ஏன் சம்பளம் விசயம் இப்படி மலிவாக பார்க்கப்படுகிறது. நீங்களே ஒன்றை முடிவுசெய்து ஏன் இப்படி கூற வேண்டும். நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்தில் இருக்கிறேன் என நச்சென பதிலடி கொடுத்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











