Priya Bhavani Shankar - சினிமாவில் பாலியல் தொல்லை.. என்ன சொல்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்?
சென்னை: Priya Bhavani Shankar (ப்ரியா பவானி ஷங்கர்) நடிகை ப்ரியா பவானி ஷங்கர் பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக களமிறங்கினார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே தனது நடிப்பில் கவனத்தை ஈர்த்தார் ப்ரியா.

முன்னணி நடிகை: முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி ஷங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.
பல படங்கள் ஓகே; ஒரு ஹிட்?: ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2, ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் பொம்மை படம் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.. பல படங்களில் அவர் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு ஹிட்கூட மேயாத மான் படத்துக்கு பிறகு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் ப்ரியா பவானி ஷங்கர் ராசியில்லாத நடிகை என்ற பெயரையும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பெயரை இந்தியன் 2வும், பொம்மையும் மாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.
சொந்த தொழில்: இதற்கிடையே சினிமாவில் மட்டுமின்றி தொழிலிலும் கவனம் செலுத்துகிறார் அவர். அந்தவகையில், லியாம்ஸ் டைனர் (Liam's Diner)என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார். புதிய தொழில் தொடங்கிய அவருக்கு ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலை அவர் தனது காதலருக்காக தொடங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை: இந்நிலையில் சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர். அவர் பேசுகையில், "பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் தைரியமாக முதலில் பேச வேண்டும். அதைவிட முக்கியமானது அவர்கள் சொல்வதை நம் சமூகம் முதலில் காது கொடுத்து கேட்க வேண்டும். அதேபோல் அவர்களை குறை சொல்வதையும் நாம் முதலில் நிறுத்த வேண்டும். நீ ஏன் இதை முன்பே சொல்லவில்லை, ஏன் இப்போ சொல்கிறாய் என்பது போன்ற கேள்விகளை கேட்பதை நிறுத்துங்கள்.
சினிமா மட்டுமில்லை: பாலியல் தொல்லை பிரச்சனையை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. ஒரு பெண் எந்த துறையில் வேலை செய்கிறார், அவர் எது மாதிரியான வேலை செய்கிறார் என்ற பாகுபாடு இல்லாமல் பல வழிகளில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார். சினிமாவில் மட்டுமின்றி பல துறைகளிலும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











