எனது குழந்தைகள் பயங்கரவாதிகளா?.. மதம் மாறினேனா?.. விமர்சித்தவர்களுக்கு பிரியாமணி பதிலடி
சென்னை: நடிகை பிரியாமணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தேசிய விருது வென்ற நடிகையான அவர் திருமணத்துக்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக மலையாளத்தில் வெளியான நேரு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். கடைசியாக அவரது நடிப்பில் மைடான் திரைப்படம் வெளியானது. இந்தச் சூழலில் பிரியாமணி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் தோல்வி அடைந்தாலும் பிரியாமணிக்கு நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்தன. அதனையடுத்து பாலுமகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே பாரதிராஜா, பாலுமகேந்திரா என இரண்டு பெரும் ஆளுமைகளின் இயக்கத்தில் நடித்ததால் திரையுலகில் வெகுவாக கவனம் ஈர்த்தார் ப்ரியாமணி.

தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் நடித்தார். முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். கார்த்தியிடம் காதலில் கசிந்துருகுவதும், காதல் விவகாரம் வீட்டில் தெரிந்த பிறகு யாருக்கும் அஞ்சாமல் இருப்பதும் என ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பு ராட்சசியாக மிரட்டியிருந்தார். குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்தார். இதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
குறைந்த வாய்ப்புகள்: பருத்திவீரனில் தேசிய விருது கிடைத்ததால் கண்டிப்பாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒன்றிரண்டு படங்களின் வாய்ப்பே அமைந்தது. அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக முஸ்தஃபா என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
நேரு: திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவர் கடைசியாக ஜவான் மற்றும் நேரு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். நேரு படத்தில் பெண் வழக்கறிஞர் கதாபாத்திரத்தையும், ஜவான் படத்தில் ஷாருக்கான் டீமில் இருக்கும் ஒரு ஆக்ஷன் வுமன் கதாபாத்திரத்தையும் ஏற்று கலக்கியிருந்தார். அடுத்ததாக அவர் நடிப்பில் மைடான் திரைப்படம் வெளியானது.
மைடான் திரைப்படம்: மைடான் திரைப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருந்தார். அமித் ஷர்மா இயக்க; போனி கபூர் ஜீ ஸ்டூடியோஸ் சார்பாக படத்தை தயாரித்திருந்தார். இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் உருவாகியிருந்தது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். இருந்தாலும் ப்ரியாமணியின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.
பிரியாமணியின் பதிலடி: சூழல் இப்படி இருக்க பிரியாமணி இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டதை அடுத்து அவரை பலரும் விமர்சித்தார்கள். தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் அவர், "எனது குழந்தைகள் பயங்கரவாதிகளாக வருவார்கள் என்ற கமெண்ட்ஸ்களை பார்த்தேன். மத வேறுபாடின்றி நான் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். அதற்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என புரியவில்லை. ஈத் பண்டிகைக்கு ஒரு போஸ்ட் போட்டேன். உடனே நீங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டீர்களா என்று கேட்கிறார்கள். நான் மதம் மாறினேன் என்று உங்களுக்கு தெரியுமா?.. அப்படியே இருந்தாலும் அது என் முடிவு. திருமணத்துக்கு முன்பே நான் எனது கணவரிடம், 'ஹிந்துவாக பிறந்த நான் எப்போது எனது நம்பிக்கையை பின்பற்றுவேன் என்றுதான் சொன்னேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











