பாலிவுட்டில் அந்த விஷயம்.. எனக்கு அப்படி இதுவரை நடந்ததில்லை.. பிரியாமணி ஓபன் டாக்
சென்னை: நடிகை பிரியாமணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தேசிய விருது வென்ற நடிகையான அவர் திருமணத்துக்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக மலையாளத்தில் வெளியான ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி படத்தில் நடித்திருந்தர். அடுத்ததாக ஜன நாயகன் படத்தில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் பிரியாமணி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் தோல்வி அடைந்தாலும் பிரியாமணிக்கு நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்தன. அதனையடுத்து பாலுமகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே பாரதிராஜா, பாலுமகேந்திரா என இரண்டு பெரும் ஆளுமைகளின் இயக்கத்தில் நடித்ததால் திரையுலகில் வெகுவாக கவனம் ஈர்த்தார் ப்ரியாமணி.
தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் நடித்தார். முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். கார்த்தியிடம் காதலில் கசிந்துருகுவதும், காதல் விவகாரம் வீட்டில் தெரிந்த பிறகு யாருக்கும் அஞ்சாமல் இருப்பதும் என ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பு ராட்சசியாக மிரட்டியிருந்தார். குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்தார். இதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

குறைந்த வாய்ப்புகள்: பருத்திவீரனில் தேசிய விருது கிடைத்ததால் கண்டிப்பாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒன்றிரண்டு படங்களின் வாய்ப்பே அமைந்தது. அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக முஸ்தஃபா என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி: திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த பிரியாமணி கடைசியாக ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி படத்தில் நடித்திருந்தார். அதில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ரோலை மிக சிறப்பாகவே செய்திருந்தார். அடுத்ததாக விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவருக்கு முக்கியமான ரோல் கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பிரியாமணி பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பாலிவுட் கலைஞர்கள் தென் மாநில கலைஞர்களை ஒழுங்காக மதிக்கமாட்டார்கள் என்று சொல்வார்கள். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் எனக்கு அப்படி எதுவும் நடந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தென் மாநில கலைஞர்கள் மீதும், சினிமா மீதும் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











