160 கோடியில் வீடு வாங்கி என்ன பயன்.. உயிருக்கே ஆபத்து.. விரக்தியுடன் வெளியேறிய பிரியங்கா சோப்ரா
சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்தார். அந்த சமயத்தில் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவைவிட ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர்கள் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிரியங்கா சோப்ரா. மாடலிங்கில் நுழைந்த அவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். அதிலிருந்து பிரியங்கா சோப்ராவின் மீது பலரது கவனம் விழுந்தது. மேலும் சினிமாவில் நுழைந்து பெரும் ரவுண்டு வருவார் என்றும் கணிக்கப்பட்டது.

தமிழன் பிரியங்கா சோப்ரா: அதன்படி முதல்முதலாக விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தை கூடுதல் ஸ்டார் வேல்யூவுடன் கொடுக்க நினைத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜிவி, மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்று சென்சேஷனலாக இருந்த பிரியங்காவை ஹீரோயினாக தேர்வு செய்தார். படம் சுமாரான ஹிட் என்றாலும் உலக அழகி நடித்திருக்கிறார் என்ற பெரும் விளம்பரம் அந்தப் படத்துக்கு பிரியங்கா சோப்ரா மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் பிரியங்கா: கோலிவுட்டில்தான் தனது கரியரை ஆரம்பித்தாலும் அதன் பிறகு ஏதோ காரணங்களால் தமிழில் அவர் நடிக்கவே இல்லை. அவர் 2003ஆம் ஆண்டு தி ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் தி ஸ்பை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக முன்னணி நடிகையாக மாறினார் ப்ரியங்கா.
பாலிவுட் டூ ஹாலிவுட்: பாலிவுட்டில் கலக்கிய ப்ரியங்கா சோப்ரா குவாண்ட்டிகோ என்ற தொடர் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதித்தார். அங்கும் தனது திறமையை அவர் நிரூபித்ததால் ஹாலிவுட்டில் செட்டில் ஆனார். மேலும் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அவர் கடைசியாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்தியாவிலிருந்து ஹாலிவுட் சென்று வெற்றிக்கொடி நாட்டிய வெகு சிலரில் பிரியங்கா முதன்மையானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
மூன்று கோடி ரூபாய்: சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி வேறு வகையில் வருமானத்தை குவிக்கிறார் பிரியங்கா சோப்ரா. அதன்படி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஏதேனும் பிராண்டின் விளம்பரம் தொடர்பாக ஒரு போஸ்ட் போட மூன்று கோடி ரூபாய்வரை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.
160 கோடி ரூபாயில் வீடு: இதற்கிடையே அமெரிக்காவில் அவரும் நிக் ஜோனஸும் சேர்ந்து 160 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கடந்த 2019ஆம் ஆண்டு வாங்கினார்கள். அந்த வீட்டில் 9 படுக்கையறைகள், 9 பாத்ரூம்கள், உடற்பயிற்சி கூடம், தியேட்டர், நீச்சல் குளம் என சகல வசதிகளும் இருக்கின்றன. அதை வீடு என்பதைவிட அவர்களுக்கான உலகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த வீடு அமைந்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளாகவே அவர்கள் அந்த வீட்டில்தான் வசித்தார்கள்.
வெளியேறிய பிரியங்கா: இந்நிலையில் தற்போது அவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அந்த வீட்டில் செய்த கட்டுமான பணிகள் முறையாக இல்லாததால் ஆங்காங்கே விரிசல்களும், நீர் கசிவும் ஏற்பட்டிருப்பதாகவும்; அதனை கவனித்த அவர்கள் இனியும் இங்கு இருந்தால் உயிருக்கே ரிஸ்க் என முடிவு செய்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டை தங்களிடம் விற்ற கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்றையும் பிரியங்கா - நிக் ஜோனஸ் தொடர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











