Priyanka Mohan -காணாமல் போன படுக்கையறை காட்சி.. பின்னணியில் இருக்கிறாரா பிரியங்கா மோகன்..?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. இந்த சூழலில் அவர் நடிப்பதற்கு முதலில் கமிட்டான டிக் டாக் படம் பற்றிய சர்ச்சையில் பிரியங்காவின் பெயர் பலமாகவே அடிபடுகிறது.
கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அடிப்படையில் பொறியாளரான இவர் அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்ததால் திரைத்துறை கதவு திறந்தது. முதல் படத்தை விக்ரம் குமார் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் பிரியங்கா மோகனின் நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.
பிஸி பிரியங்கா: டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். இப்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிக் டாக்: இதற்கிடையே தமிழில் அவர் நடிப்பில் டாக்டர் படம் முதலில் வெளியானாலும் அதற்கு முன்னதாகவே டிக் டாக் என்ற படத்தில் கமிட்டாகி நடித்துவிட்டார் என கூறப்படுகிறது. அந்தப் படமானது சில தினங்களுக்கு முன்புதான் வெளியானது. அதன் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் இருந்தது. ஏனெனில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன்; டிக் டாக் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார்.
காட்சிகளை காணவில்லை: இந்நிலையில் டிக் டாக் படத்தில் பிரியங்கா மோகன் சம்பந்தப்பட்ட 20 நிமிட காட்சிகளை காணவில்லை என்று படக்குழுவினர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரண்டு மணி நேர படத்தில் 20 நிமிட காட்சிகளை காணவில்லை. அதில்தான் படத்தில் நடித்த இரண்டு ஹீரோயின்களின் பாடல்களும் இருந்தன. குறிப்பாக பிரியங்கா மோகனின் காட்சிகள் அதில்தான் இருந்தன. இதற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்கிறார்கள்.
நாங்கள் முழு படத்தையும் மாஸ்டர் காப்பி பார்க்கவில்லை. படத்தை தியேட்டரில்தான் பார்த்தோம். அப்போதுதான் 20 நிமிட காட்சி இல்லை என்பது தெரிந்தது. க்யூப், யுஎஃபோ தொழில்நுட்பம் இருக்கும் தியேட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றன. ஆனால் டிஎஸ் ஆர் தொழில்நுட்பம் உள்ள தியேட்டரில் காட்சிகள் இல்லை. சென்னையில் மொத்தம் 7 தியேட்டர்களில் இந்த வசதி இருக்கிறது. விளக்கம் கேட்டு டிஎஸ் ஆர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
யாரையும் குற்றஞ்சாட்டவில்லை: படத்தின் முதல் நாள் 20 நிமிட காட்சிகள் இடம்பெறாமல் படத்துக்கு எதிர்மறையான விமர்சனம் கிடைத்தது. படத்தின் தயாரிப்பாளர் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார். டிக் டாக் படம் கம்மியான தியேட்டர்களில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.பிரியங்கா மோகனின் காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டதற்கு பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. நாங்கள் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. ரிலீஸ் செய்வதற்கே அவ்வளவு கஷ்டப்பட்டோம்" என்றனர்.
பின்னணியில் பிரியங்கா?: இந்நிலையில் இதையெல்லாம் கவனித்த நெட்டிசன்ஸ் இதற்கு பின்னணியில் பிரியங்கா மோகன் இருக்கலாம் என கூற ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது இப்போது ஹோம்லி கேரக்டரில் நடித்து வரும் அவர் டிக் டாக்கில் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்திருக்கிறார். எனவே இப்போது அந்த காட்சிகள் வெளியானால் நிச்சயம் தனது கரியரில் அதுபோன்ற கேரக்டர்கள் வரும் என பயந்திருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











