Priyanka Mohan: திடீரென சரிந்த மேடை.. எதிர்பாராத விபத்தில் சிக்கிய பிரியங்கா மோகன்.. என்ன ஆச்சு?
ஹைதரபாத்: நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் எந்தளவுக்கு பிசியாக நடித்து வருகிறாரோ அதே அளவுக்கு ஏகப்பட்ட கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், தெலங்கானாவில் உள்ள தோரூர் எனும் இடத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட நடிகை பிரியங்கா மோகன் எதிர்பாராத விதமாக மேடை சரிந்து விழுந்ததில் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானியின் சூர்யாவின் சாட்டர்டே திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றி பெற்றது. சமீபத்தில், அந்த படம் ஓடிடியில் வெளியாகியும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

அடுத்ததாக வரும் தீபாவளிக்கு ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்திலும் பிரியங்கா மோகன் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனக்கு என்ன ஆனது என்பது குறித்தும் நடிகை பிரியங்கா மோகன் ட்வீட் போட்டு விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் முதல் தீபாவளி வரை: இந்த ஆண்டு பொங்கலுக்கு பிரியங்கா மோகன் தனுஷ் உடன் இணைந்து நடித்த கேப்டன் மில்லர் படம் வெளியானது. சமீபத்தில் வெளியான சரிபோதா சனிவாரம் எனும் தெலுங்கு படம் தெலுங்கு மற்றும் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கும் பிரியங்கா மோகன் நடித்துள்ள பிரதர் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்துக்கு 3 படங்களுக்கும் மேல் கொடுத்து ஏகப்பட்ட இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் பிரியங்கா மோகன்.

ஃபாலோ பண்ணாதீங்க: நடிகை பிரியங்கா மோகன் மீது பல இளைஞர்கள் பித்துப் பிடித்து உள்ள நிலையில், சமீபத்தில், ரசிகர் ஒருவரை பிரியங்கா மோகன் கண்டித்த வீடியோக்கள் தீயாக பரவின. மேலும், காருக்குள்ளே வந்து உட்கார்ந்துக்குறியா என்றும் கடுப்பாகி பிரியங்கா மோகனன் பேசிய வீடியோக்களும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
கோல்டன் ஸ்பேரோ டான்ஸ்: கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா மோகன் தனுஷ் இயக்கத்தில் தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்து வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஆட்டம் போட்ட கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கும் பொதுவெளியில் ரசிகர்களுக்காக ஆட்டம் போட்டிருந்தார். பீனிக்ஸ் மாலில் பிரியங்கா மோகனை பார்க்க ஏராளமான கூட்டம் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

சரிந்து விழுந்த மேடை: இந்நிலையில், இன்று தெலங்கானாவில் உள்ள தோரூர் எனும் இடத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட நடிகை பிரியங்கா மோகன் எதிர்பாராத விதமாக மேடை சரிந்து விழுந்ததில் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். காசம் எனும் துணிக்கடை திறப்பு விழாவுக்கு நடிகை பிரியங்கா மோகன் வந்திருந்த நிலையில், ஏராளமானோர் அவரை காண கூடியிருந்தனர். விழா ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த மேடையில் கடையின் உரிமையாளர் மற்றும் பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் ஏறிய போது அந்த மேடை அப்படியே சரிந்து விபத்தில் சிக்கியது.
பிரியங்கா மோகன் ட்வீட்: இன்று தோரூரில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. அந்த விபத்தில் சிக்கிய பலரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களும் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். எனக்காக வேண்டிக் கொண்ட அனைவருக்கும் நன்றி என பிரியங்கா மோகன் ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











