இந்திக்காக தமிழ்ப் படத்தில் இருந்து எஸ்கேப்... 'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயின் மீது தயாரிப்பாளர் வழக்கு
சென்னை: இந்திப் படத்துக்காக, அக்னிச் சிறகுகள் படத்தில் இருந்து விலகிய, அர்ஜூன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டே மீது தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மூடர் கூடம் படத்தை இயக்கி நடித்த நவீன், கொளஞ்சி என்ற படத்தைத் தயாரித்தார். அடுத்து, அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதற்கிடையே, 'அக்னிச் சிறகுகள்'படத்தை இயக்கி வருகிறார். இதில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ரஷ்யாவில் ஷூட்டிங்
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங், கொல்கத்தா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது. அடுத்து கஜகஸ்தானில் நடக்க இருக்கிறது.

ஷாலினி பாண்டே
இதில் ஹீரோயினாக, ஷாலினி பாண்டேவை முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. பின்னர் அவரை நீக்கிவிட்டு அக்ஷரா ஹாசனை நடிக்க வைத்தனர்.

அக்ஷரா ஹாசன்
ஷாலினி பாண்டேவை நீக்கியது ஏன் என்று இயக்குனர் நவீன் கூறும்போது, படத்தின் கதையை எழுதும்போதே, அக்ஷரா ஹாசனை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டோம். அவர் கால்ஷீட் கிடைக்காததால், ஷாலினி பாண்டேவை வைத்து ஷூட்டிங்கை தொடங்கினோம். பின்னர் அக்ஷரா ஹாசன் கால்ஷீட் கிடைத்ததால் அவரை மாற்றினோம் என்று கூறியிருந்தார்.

தயாரிப்பாளர் வழக்கு
இந்நிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஷாலினி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'இந்தப் படத்துக்காக ரூ.35 லட்சம் சம்பளம் பேசி, ஷாலினியை ஒப்பந்தம் செய்தோம். ரூ.15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தோம்.

இந்தி படம்
பாதி நாள் நடித்துவிட்டு, இந்தியில் உருவாகும் ஜயேஷ்பாய் ஜோர்டார் என்ற படத்தில் நடிப்பதற்காகச் சென்றுவிட்டார். பிறகு எங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











