சரி, களஞ்சியத்துடன் நடிக்க விரும்பலைன்னா பரவால்ல.. நஷ்ட ஈடு கொடுங்க! - அஞ்சலிக்கு நெருக்கடி
சென்னை: களஞ்சியத்துடன் நடிக்க விரும்பாவிட்டால், அதற்கான நஷ்ட ஈட்டை தயாரிப்பாளருக்கு அஞ்சலி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க கில்டு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில், தயாரிப்பாளர் சங்கம் போலவே, கில்டு என ஒரு அமைப்பும் உள்ளது. இத்தனை நாட்கள் சத்தமின்றி செயல்பட்டு வந்த கில்டில், இப்போது கொஞ்சம் சவுண்ட் கேட்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நடிகை அஞ்சலி விவகாரத்தில், இயக்குநர் களஞ்சியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
களஞ்சியம் மற்றும் பாரதிதேவியின் தொல்லை தாங்காமல் சென்னையிலிருந்து வெளியேறி, ஹைதராபாதில் தங்கி தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜெயம் ரவியுடன் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தனது ஊர்சுற்றி புராணம் படத்தை முடித்துக் கொடுக்காமல் அஞ்சலி வேறு படங்களில் நடிக்க கூடாது என்று களஞ்சியம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சங்கங்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க கில்டு பொதுச் செயலாளர் ஜாகுவார் தங்கம் கூறுகையில், "நடிகை அஞ்சலி, களஞ்சியத்தின் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். அதைச் செய்யாமல் வேறு எந்த மொழி படத்திலும் நடிக்கக் கூடாது.
தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படத் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதி அஞ்சலியை புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளோம்.
ஊர்சுற்றிப் புராணம் படத்தில் அவர் நடிக்காததால் தயாரிப்பாளர் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளார்.
களஞ்சியத்துடன் அந்தப் படத்தில் அஞ்சலி நடிக்க விரும்பாவிட்டால் அதற்கான நஷ்டஈட்டை அவர் வழங்க வேண்டும். நடித்து கொடுக்க முன்வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications












