நயன்தாராவுக்குள் இருக்கும் அந்த குணம்.. உன்னிப்பாக கவனித்த ராதிகா.. இப்படி உடைச்சிட்டாங்களே
சென்னை: நயன்தாரா கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சக்சஸ்ஃபுல் ஹீரோயினாக மிளிர்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்தெல்லாம் இஷ்டத்துக்கு எழுதினார்கள், பேசினார்கள். அதையெல்லாம் அசால்ட்டாக டீல் செய்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். மேலும் தொடர்ந்து நடிக்கவும் செய்கிறார். இப்போதும் அவர் கைகளில் 4 படங்கள்வரை இருக்கின்றன. இந்நிலையில் நயனின் குணாதிசயம் பற்றி ராதிகா ஓபனாக பேசியிருக்கிறார்.
கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாப்படுபவர் நயன்தாரா. திரைத்துறைக்கு வந்த புதிதில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அவை அனைத்தையும் தனது மன திடத்தினால் தவிடு பொடியாக்கினார். அப்போதைக்கு அவரை தரக்குறைவாக பேசிய பலர் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் கண் முன்னேயே நயனின் அசுர வளர்ச்சி நிச்சயம் பொறி கலங்க செய்திருக்கும். இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகும் நயன் காதலைத்தான் தேடி சென்றார்.

விக்னேஷ் சிவனுடன் திருமணம்: காதலித்து திருமணம் செய்த பிறகு திருமண வாழ்க்கையில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக விக்கியும், நயனும் ஒருவரை புரிந்துகொண்ட பிறகுதான் திருமணம் செய்தார்கள். அதற்காக அவர்கள் சில வருடங்கள் காத்திருக்கவும் செய்தார்கள். திருமணம் முடிந்த கையோடு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார். வழக்கம்போல் அதிலும் சர்ச்சையை உருவாக்கி தமிழ்நாடு அரசு இறங்கி விசாரணை செய்யும் அளவுக்கு நிலைமை சென்றது. இறுதியில் எந்த விதிமீறலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
நடிப்பில் பிஸி: கணவர், குழந்தை என்று வந்துவிட்டால் சினிமாவில் நடிப்பதை நடிகைகள் குறைக்கும் சூழலில்; நயன் முன்னரை விட இப்போது வேகமாக இயங்கிவருகிறார். டாக்சிக், மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. அண்மையில் டாக்சிக் படத்திலிருந்து வெளியான நயனின் லுக்கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த மன சங்கர வர பிரசாத் குரு படம் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனால் நயனின் ப்யூட்டி அப்படியேத்தான் இருக்கிறது என தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
மற்ற துறைகளிலும்: சினிமாவில் எப்படி பெரிய ஆளுமையாக நயன் திகழ்கிறாரோ அதேபோல் மற்ற தொழில்களிலும் இருக்கிறார். நாப்கின் வியாபாரம், ஸ்கின் கேர் க்ரீம் என பல தொழில்களை தொடங்கி அசத்துகிறார். இந்நிலையில் நயன்தாரா குறித்து ராதிகா சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசிய விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் பேசுகையில், "இப்போதைய தலைமுறை வேறாக இருக்கிறது. நிறைய நடிகைகள் நன்றாக செய்கிறார்கள். சூர்யாவுடன் ஒரு படத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறேன். அதில் ஹீரோயினாக நடிக்கும் மமிதா பைஜு அட்டகாசமான நடிகை. அசால்ட்டாக அனைத்தையும் செய்கிறார்.
நயன்தாராவின் குணம்: சாய் பல்லவி, திரிஷா நடிப்பு பிடிக்கும். நயன்தாராவின் ஆளுமை பிடிக்கும். பார்ப்பதற்குத்தான் வெளியே சிரித்தபடி இருப்பார். ஆனால் அவருக்குள் பெரிய அழுத்தம் ஒன்று இருக்கிறது. அந்த அழுத்தம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். பல சமயங்களில் அவரிடம் என்னை நான் பார்த்திருக்கிறேன். சினிமாவில் அவர் நிலைத்திருப்பதை பார்த்து மகிழ்ச்சி" என்றார்.


Click it and Unblock the Notifications















