என்ன ஒரு தாராள மனசு.. 200 குடும்பங்களுக்கு உதவி.. ரகுல் ப்ரீத் சிங்குக்கு குவிகிறது பாராட்டு!
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பசியால் தவிக்கும் 200 குடும்பங்களுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் உதவி செய்து வருகிறார்.
கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது. இதுவரை 59 ஆயிரம் பேர் வைரஸ் பாதிப்பு காரணமாக பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

பிரபலங்கள் உதவி
கொரோனா பாதிப்பால் மக்கள் தவித்து வரும் நிலையில், மக்களால் கோடி கோடியாக சம்பாதித்த நட்சத்திரங்கள் தங்களால் முயன்ற சில லட்சங்களை உதவியாக வழங்கி வருகின்றனர். இந்தியளவில் அதிகமாக நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி அளிப்பதாக உறுதியளித்துள்ளார். தென்னிந்தியாவிலும் உதவிக் கரங்கள் நீண்டு வருகின்றன.

விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் பாதிக்காமல் மக்கள் தங்களை காத்துக் கொள்ள சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல முன்னணி நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகை நயன்தாரா FEFSI தொழிலாளர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியளித்துள்ளார்.

200 குடும்பங்களுக்கு
இந்தியளவில் சில நடிகைகள் தங்களால் முயன்ற உதவிகளை இந்த நெருக்கடியான நேரத்தில் செய்து வரும் நிலையில், என்.ஜி.கே., தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், குர்கானில் தனது வீட்டுக்கு பக்கத்தில் பசியால் வாடும் 200 ஏழைகளுக்கு தினமும் உணவு அளித்து வருகிறார்.

கொரோனா முடியும் வரை
இந்த இக்கட்டான சூழலில், நம்மால் முடிந்த சின்னஞ்சிறு உதவிகளை கூட மக்களுக்கு நாம் செய்ய கடமைப்பட்டு இருக்கிறோம் எனக் கூறிய ரகுல் ப்ரீத் சிங், கொரோனா வைரஸ் பிரச்சனை முடியும் வரை அத்தனை குடும்பங்களுக்கு உணவுகளை தயாரித்து கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த தாராள மனசுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
Recommended Video

வெயிட்டிங்கில்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் ரிலீசுக்காகவும் காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











