கனகாவை பார்த்து ஷாக் ஆகிட்டேன்.. பேச விரும்பவில்லை.. ராமராஜன் வேதனை
சென்னை: நடிகை கனகா 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து டாப் இடத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென காணாமல் போனார் கனகா. அதனையடுத்து அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இதனையடுத்து நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனையடுத்து மீண்டும் கனகா குறித்து ரசிகர்கள் அதிகம் பேச ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் நடிகர் ராமராஜன் கனகா குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பெரிய விருப்பம் எதுவும் இல்லாமல்தான் கனகா நடிப்பதற்கு தேவிகா ஒத்துக்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் காரணமாக கனகா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

பிஸியான கனகா: தமிழில் முதல் படம் ஹிட்டான பிறகு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா. அதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆனார். இதன் காரணமாக நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் காணாமல் போனார். ஒருகட்டத்தில் கனகா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.
தனிமையில் கனகா: அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திப்பதில்லை, வெளியே வருவதில்லை என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு காரணம் தேவிகாவின் மரணம் ஒன்று என்றும் இன்னொரு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி என்றும் பேசப்பட்டது. இருந்தாலும் கனகா பத்திரிகையாளர்களையோ சினிமாக்காரர்களையோ சந்திக்கவே இல்லை.
நோ பேட்டி: இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த விஷயத்துக்குள் நடிகை குட்டி பத்மினி வந்தார். கனகாவின் வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து அவரை எப்படியோ சந்தித்துவிட்டார். இரண்டு பேரும் அருகில் இருக்கும் காஃபி ஷாப் ஒன்றுக்கு சென்று நீண்ட நேரம் பேசியிருந்துவிட்டு கலைந்தனர். அப்போது கனகாவுக்கு குட்டி பத்மினி முத்தம் கொடுக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அதனையடுத்து குட்டி பத்மினிக்கு கனகா பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
ராமராஜன் பேட்டி: இந்நிலையில் சாமானியன் படத்தில் நடித்திருக்கும் ராமராஜன் கனகா குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது ஒருவர் வந்து உங்களை பார்க்க கனகா வந்திருக்கிறார் என்று சொன்னார். நான் ஆர்வமாக சென்று ஒரு பெண்மணியிடம் கனகா எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர் நான் தான் கனகா என்று சொல்லி சிரித்தார். வெயிட் போட்டு தலையில் சிகப்பு நிற டை அடித்து ஆளே மாறியிருந்தார். நான் ஷாக் ஆகிட்டேன். அதற்கு மேல் அதை பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் ஒன்று அவரது அம்மா உயிரிழப்பு கனகாவை ரொம்பவே பாதித்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











