"அரசியலைவிட்டு விலக மாட்டேன், மக்கள் சேவையாற்றுவேன்"-நடிகை ரம்யா திட்டவட்டம்
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு நான் அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டதாக கூறியது தவறு, நான் அரசியலில் தொடர்ந்து நீடித்து மக்கள் சேவையாற்றுவேன் என்று நடிகை ரம்யா தெரிவித்தார்.

தமிழில் பொல்லாதவன், குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்தில் நம்பர்-1 நடிகையாக விளங்கிவந்த நிலையில் கடந்தாண்டு, மண்டியா மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் அதே தொகுதியை காங்கிரஸ் ரம்யாவுக்காக ஒதுக்கியது. ஆனால் இம்முறை சுமார் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரம்யா தோல்வியடைந்தார்.
இதையடுத்து சில நாட்களிலேயே மண்டியாவில் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூர் இல்லத்திலேயே ரம்யா குடியேறிவிட்டார். அவரது நடவடிக்கைகள் கன்னட மீடியாக்களால் விமர்சனம் செய்யப்பட்டன. தோல்வியடைந்ததும் தொகுதியையே காலி செய்துவிட்டதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி கேலி செய்தது. இந்நிலையில் மீண்டும் மண்டியாவில் குடியேறியுள்ளார் ரம்யா. இதுகுறித்து மண்டியாவில் இன்று நிருபர்களுக்கு ரம்யா அளித்த பேட்டி: வாடகை பிரச்சினை காரணமாக ஏற்கனவே வசித்த வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூர் சென்றிருந்தேன்.
இப்போது மற்றொரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மண்டியாவிலேயே குடியேறியுள்ளேன். இந்த காலகட்டத்துக்குள் எனக்கு எதிராக வீண் வதந்திகள் பரப்பிவிடப்பட்டுள்ளன. நான் அரசியலைவிட்டு விலகவில்லை. தொடர்ந்து அரசியலில் இருந்து மக்களுக்கு சேவையாற்றுவேன். மண்டியா தொகுதிக்குட்பட்ட மத்தூர் பகுதியில், இஸ்லாமிய மவுல்வியால் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்றார்.


Click it and Unblock the Notifications











