ஆபாசமான அசைவு.. முகம் சுளிக்க வைக்கும் ‘புஷ்பா 2’ பீலிங்ஸ் பாடல்.. ராஷ்மிகா சொன்ன அந்த விஷயம்!
சென்னை: புஷ்பா இரண்டாம் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் வரும் பீலிங்ஸ் பாடலை ஒரு சிலர் கொண்டாடி வரும் நிலையில், இந்த பாடலில் இரட்டை அர்த்தம் கொண்ட வரிகளும், நடன ஆசைவுகளும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து பேசி உள்ள நடிகை ராஷ்மிகா, அந்த பாடலுக்காக ஒத்திகை எடுத்த போதே,பல அசைவுகளை பார்த்து நான் பயந்தேன் என்று கூறியுள்ளார்.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, மிகப்பெரிய பொருட் செலவில், உருவான இரண்டாம் பாகம் டிசம்பர் 5ந் தேதி வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில் மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடல் குறித்து, ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசி உள்ளார். இந்த பாடலின் நடன அசைவாலும் நடன காட்சியாலும் முதலில் தான் அசௌகரியமாக இருந்ததாக கூறியுள்ளார்.

சர்ச்சை பாடல்: மேலும், “பீலிங்ஸ் பாடல் ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் படமாக்கப்பட்டது. ஐந்து நாட்களில் அந்த பாடலின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். அந்த பாடலுக்காக ஒத்திகை எடுத்த போதே,பல அசைவுகளை பார்த்து நான் பயந்தேன், ஏன் என்றால், நான் அல்லு அர்ஜுன் மீது நடனம் ஆடுவது போல, பல அசைவுகள் இருந்தன. இதுகுறித்து நான் கேட்ட போது, என்னை சமாதானப்படுத்தி, அதை ஒரு சவாலாக நினைத்துக்கொள்ளுங்கள் என்றனர். ஆனால், நிச்சயம் இந்த பாடல் சர்ச்சைக்குரியதாக மாறும் என்று நினைத்து, இதை எப்படிச் செய்யப் போகிறேன் என்று நினைத்தேன்.
அதுதான் என் வேலை: ஆனால், ஒரு நடிகையாக, மற்றவர்களை மகிழ்விப்பதும், இயக்குனரை மகிழ்விப்பதும் தான் என் வேலை என்பதால், இயக்குநரிடம் பாராட்டை பெற வேண்டும், சூப்பர் என்ற வார்த்தையை கேட்க நான் கடுமையாக உழைத்தேன். Animal, Chhava மற்றும் Sikandar போன்ற படத்தில், மரங்களைச் சுற்றி ஓடி ஆடிவிட்டேன்.. ஆனால், புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி அப்படி ஆடமுடியாது. மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து என்றார்.
வசூல் சாதனை: புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் இறந்ததால் அல்லு அர்ஜுன் சட்ட சிக்கலில் சிக்கி கைது செய்யப்பட்டார். புஷ்பா 2 படம் வெளியானதில் இருந்து படத்திற்கு பல விதத்தில் இருந்து எதிர்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. எது எப்படியாக இருந்தாலும், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை யாராலும் தடுக்க முடியாது என்று ராஷ்மிகா மந்தனா அந்த பேட்டியில் பேசி உள்ளார். புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 15 நாட்களை தாண்டிய போதும், மல்டிப்ளக்ஸ் மற்றும் திரையரங்குகளில் படத்தை பார்க்க கூட்டம் குவிந்து வருகிறது. படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று உலகளவில் ரூ.1,500 கோடியை தாண்டி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











