பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிடுவதாக மிரட்டல்.. ஸ்கிரீன்ஷாட்டுடன் பிரபல நடிகை பரபரப்பு புகார்!
மும்பை: தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிடுவதாக மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

ரியா சக்கரவர்த்தி
மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கான காரணம் பற்றி மும்பை பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் காதலி ரியா சக்கரவர்த்தி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உட்பட பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், சுஷாந்துடன் நடித்தவர்கள் என 29 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கதறி அழுவார்
நடிகை ரியா, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'சுஷாந்துக்கு மன அழுத்தம் இருந்தது. அவர் அதை வெளியில் சொன்னதே இல்லை. இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் அடிக்கடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார். பலமுறை அப்படி செய்திருக்கிறார். சில வேளை, கதவை பூட்டிக் கொண்டு பல மணிநேரமாகக் கதறி அழுவார்' என்று தெரிவித்திருந்தார்.

நெபோடிசம்
சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில், நெபோடிசம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து, கடந்த 14 ஆம் தேதி ஒரு மாதம் ஆனது.

உருக்கமானப் பதிவு
இதையடுத்து தனது வாட்ஸ் அப் டிஸ்பிளேவில், சுஷாந்த் சிங்குடன் தான் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படத்தை வைத்தார், ரியா சக்கரவர்த்தி. பிறகு சுஷாந்த் சிங் பற்றி உருக்கமானப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தனக்கு வந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் இப்போது வெளியிட்டுள்ளார்.

கொலைகாரி என்றார்கள்
அதில், அவர் கூறியிருப்பதாவது: 'என்னை பணத்துக்காகப் பழகியவள் என்று சொன்னார்கள். பொறுத்துக்கொண்டேன். கொலைகாரி என்றார்கள், அமைதி காத்தேன். ஒழுங்கம் கெட்டவள் என்றார்கள். அப்போதும் அமைதியாகவே இருந்தேன். ஆனால், நான் தற்கொலை செய்துகொள்ளாவிட்டால், என்னை பாலியல் வன்கொடுமை செய்வோம் என்றும் கொன்று விடுவோம் என்றும் மிரட்டும் உரிமையை என் மவுனம் உங்களுக்கு எப்படி தருகிறது?

எதிர்கொள்ள கூடாது
நீங்கள் கூறியதின் தீவிரத்தைக் கொஞ்சமாவது உணர்ந்தீர்களா? இவை குற்றங்கள். இதுபோன்ற துன்புறுத்தலை யாரும் எதிர்கொள்ள கூடாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீசாரை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரியா கூறியுள்ளார். சைபர் கிரைம் போலீசுக்கு இந்தப் பதிவை டேக் செய்துள்ளார். அதோடு தனக்கு வந்த கொலை மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவு செய்துள்ளார்.

சீரியசாக எடுக்க வேண்டும்
இதையடுத்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ள நடிகை புமி பட்கேனர், இது பயங்கரமான மிரட்டல். இதை போலீசார் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இவரைப் போலவே பலரும், அவரை, தைரியமாக இருக்குமாறும் யாரும் அதுபோன்று செய்துவிட முடியாது என்றும் அவருக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர். நடிகை ரியாவின் இந்தப் பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











