கணவர் செல்வமணியைப் பிரிந்துவிட்டேனா...? - ரோஜா விளக்கம்
நானும் என் கணவர் ஆர் கே செல்வமணியும் பிரிந்துவிட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. நாங்கள் ஒற்றுமையாக ஒன்றாகத்தான் வசிக்கிறோம், என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
செம்பருத்தி படம் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமானவர் ரோஜா. ஆர் கே செல்வமணிதான் இவரை அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தின் வெற்றி ரோஜாவை 1990-களில் முன்னணி கதாநாயகியாக ஆக்கியது. 2002-ல் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு ரோஜா நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நின்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார்.
ஆர்.கே.செல்வமணி சென்னையில் இருக்கிறார். ரோஜாவுக்கும் ஆர்.கே. செல்வமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக பேச்சுக்கள் கிளம்பின. செல்வமணியை பார்க்க ரோஜா சென்னைக்கு வருவதில்லை என்றும், கூறப்பட்டது. இதனை ரோஜா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது கணவர் சினிமாவில் இருக்கிறார். நான் அரசியலில் இருக்கிறேன். இதனால் எங்களால் அடிக்கடி சந்திக்க முடிவது இல்லை. இதை வைத்துதான் அப்படி பேசுகிறார்கள். ஹைதராபாத்தில் என் வீட்டில் வந்து பார்த்தால் உண்மை தெரியும்.
என் கணவரும் நானும் குழந்தைகளும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது கணவர் சென்னையிலிருந்து ஹைதராபாத் வந்து எங்களை பார்த்து விட்டு போகிறார்," என்றார்.


Click it and Unblock the Notifications











