ஹே மின்னலே.. படுகர் நடனம் ஆடிய சாய் பல்லவி.. எதையும் இன்னும் மறக்கல.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. கடைசியாக அவர் அமரன், தண்டேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர் சாய் பல்லவி. அதன் காரணமாக தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தவருக்கு சேனல் ஒன்றில் நடந்த நடன போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த அரங்கத்தில் ஆடிய ஒவ்வொரு நடனத்தின் அசைவும் அனைவரையும் கவர்ந்தது. இதற்கிடையே அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் மருத்துவமும் படித்திருக்கிறார்.
பிரேமம் மலர் டீச்சர்: இதனையடுத்து பிரேமம் படத்தில் அறிமுகமானார் சாய் பல்லவி. முதல் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் தங்களது நெஞ்சத்தில் குத்தி வைத்துக்கொண்டனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
எதார்த்த அழகு: ஹீரோயின் என்றாலே மேக்கப்புகளை அள்ளி பூசிக்கொண்டு, வித விதமான உடையை அணிந்துகொண்டு, வழவழப்பான மரு இல்லாத கன்னங்களுடன் வலம் வர வேண்டும் என ஒரு விதி இருந்தது. அதை உடைத்ததில் பெரும் பங்கு சாய் பல்லவிக்கு உண்டு. அவரை பார்த்தால் நம்மிலிருந்து ஒரு பெண் நடிக்க சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். நிகழ்ச்சிகளுக்கு வந்தால் திகட்டாத மேக்கப், உடைகள் என எதையும் அணிந்துகொள்ளாமல் வெகு இயல்பாக தோன்றுவதாலேயே ரசிகர்கள் சாய் பல்லவியை தங்கள் வீட்டு பெண்ணாக நினைக்க தொடங்கியிருக்கின்றனர்.

அடுத்தடுத்த படங்கள்: அவர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக பல்லவியின் நடிப்புக்கு உச்சக்கட்ட அப்ளாஸ் கிடைத்தது. மேலும் சாய் பல்லவி மட்டும் இல்லையென்றால் அமரன் திரைப்படம் ஒரு சுமாரான படமாகத்தான் இருந்திருக்கும் என அவரது ரசிகர்கள் ஓபனாகவே சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.
தண்டேலும் அப்படித்தான்: அமரன் படத்தை முடித்துவிட்டு நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தண்டேல் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தையும் சாய் பல்லவி தனி ஆளாக தாங்கி நின்றார். பிடிபட்ட மீனவர்களுக்காக போராட்டம் நடத்துவது, தனது காதலர் மீது கோபம், பரிதாபம் கொள்வது என அத்தனை ஏரியாக்களிலும் தான் ஒரு மிகச்சிறந்த நடிகை என்று நிரூபித்தார். அமரன், தண்டேல் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
படுகர் நடனம் ஆடிய சாய் பல்லவி: இப்போது அவர் ஹிந்தியிலும் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் சாய் பல்லவியும் அவரது சகோதரி பூஜாவும் பாரம்பரிய படுகர் நடனத்தை ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்த நடனத்தை ஆடி முடித்தவுடன் அங்கிருந்த மக்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார் அவர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











