நாக சைதன்யாவுடன் நடித்த படம்.. சமந்தா எதையும் மறக்கவில்லை.. அற்புதமான அனுபவமாம்
சென்னை: சமந்தா நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. அதேசமயம் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்று ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள். மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்டிருக்கும் அவர் மீண்டும் பழையபடி நடிக்க ஆரம்பித்திருப்பது அவரது ரசிகர்களிடையே உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோயினாகவும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்தும் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அவர் தனது அபாரமான திறமையால் குறுகிய காலத்திலேயே தமிழில் முன்னணி நடிகை என்ற இடத்தை அடைந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். அங்கும் தனது கொடியை பறக்க வைத்த அவர் நாக சைதன்யாவை காதலித்தார்.

சைதன்யாவை பிரிந்த சமந்தா: விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் உருவானது. நாக சைதன்யா - சமந்தா காதலுக்கு நாகார்ஜுனா வீட்டில் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து இரண்டு பேரும் 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்துக்கு பிறகு சமந்தா தொடர்ந்து நடித்தார். அதற்கு சைதன்யாவின் ஆதரவும் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் நாக சைதன்யாவின் குடும்பம் சமந்தா நடிப்பதை விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவர்களது விருப்பத்துக்கு மாறாக சாம் தொடர்ந்து நடித்தார். இதனால் திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் நாளடைவில் பெரிதாகி விவாகரத்தில் முடிந்தது.
விலகிய சமந்தா: திருமண உறவிலிருந்து வெளியே வந்த அவர் புஷ்பா படத்தி ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதற்கு பிறகு அவரது கிராஃப் உச்சம் சென்றது. இருந்தாலும் அந்த சமயத்தில் மையோசிடிஸ் என்னும் தோல் நோய் அவருக்கு வந்தது. அதன் காரணமாக சினிமாவிலிருந்து விலகி சிகிச்சை எடுத்துக்கொண்டார். விரைவில் சமந்தா உடலளவிலும், மனதளவிலும் தேறி பழைய ஃபார்மில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். இதனத் தொடர்ந்து அவர் சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கினார்.
மீண்டும் ஃபார்மில் சமந்தா: சூழல் இப்படி இருக்க மீண்டும் அவர் இப்போது நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார். அதில் சமந்தாவின் நடிப்புக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இன்னொரு வெப் சீரிஸிலும் நடித்துவரும் அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சமந்தாவின் பேட்டி: இந்நிலையில் சமந்தா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "நான் ஹீரோயினாக நடித்த முதல் படமான மாஸ்கோவின் காவிரி படத்தில் எனது நண்பர் ராகுல் ரவீந்திரனும் நடித்திருந்தார். அந்தப் படம் பற்றிய நினைவுகள் அதிகமாக இல்லை. அதேசமயம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான யே மாயா சேசவே படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் இப்போதும் நினைவில் இருக்கிறது.
அற்புதமான அனுபவம்: கார்த்திக்கை கேட்டின் அருகே சந்திக்கும் காட்சிதான் முதலில் அந்தப் படத்தில் நான் நடித்த காட்சி. அந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் 15 வருடங்கள் என்பது நீண்ட காலம் ஆகும். இப்போது நான் நடித்த சில படங்களை பார்க்கும்போது இவ்வளவு மோசமாகவா நடித்திருக்கிறேன் என்று தோன்றும். ஆனால் நான் அப்படித்தான் படிப்படியாக கற்றுக்கொண்டேன். எனக்கு சினிமாவில் வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை.
தெரியாமல்தான் இருந்தேன்: வேறு மொழிகள்கூட தெரியாமல்தான் நான் சினிமாவில் இருந்தேன். அனைத்தையும் நான் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு சினிமாவில் நண்பர்கள் இல்லை. உறவினர்கள் இல்லை. அனைத்துமே புதிதுதான். இந்த 15 வருடங்களும் கற்றுக்கொள்ளும் அனுபவமாகத்தான் இருந்தது. எனது பலம் என்ன பலவீனம் என்ன என்பது தெரியும். எனவே அடுத்த 15 வருடங்களை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











